தொடர்ந்து ராஜினாமா செய்து வரும் ஊழியர்களை, கட்டுப்படுத்த ஐடி நிறுவனம் ஒன்று, தன்னிடம் வேலை பார்ப்பவர்களில் சிறந்த ஐந்து பேருக்கு 5 பிஎம்டபிள்யு கார்களை பரிசாக வழங்கியுள்ளது. மற்றொரு நிறுவனம் 100 பேருக்கு மாருதி சுசூகி கார்களை வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா தொற்றினால் தொழில்துறை நிறுவனங்கள் பயங்கரமாக பாதிக்கப்பட்டன. இதன் விளைவாக ஐடி நிறுவனங்களில் இருந்து பல ஊழியர்கள் திருப்பி அனுப்பப் பட்டனர். பலருக்கு சம்பள குறைப்பு ஏற்பட்டது. மேலும் பலர் தங்களுடைய வேலையில் இருந்தே விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் நிலைமை மீண்டும் சரியாகி மெல்ல மீள ஆரம்பித்தது.
ஆனால், இந்த நடவடிக்கையின் எதிரொலியாக ஊழியர்கள் ராஜினாமா செய்ய ஆரம்பித்தனர். இந்த ராஜினாமா விகிதம் நாளுக்கு நாள் அதிகரிக்க ஆரம்பித்தது. இதனை சரிக்கட்ட ஐடி நிறுவனங்கள் இந்த கார் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. கொரானா காலங்களில் ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை பார்த்ததால் நிறுவனங்களுக்கு செலவு மிச்சமானது. இதனால், சம்பள உயர்வு மற்றும் புதிய சலுகைகளை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதிய நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில், ஐடி ஊழியர்களுக்கு சுமார் 25 சதவீதம் வரை சம்பள உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையைச் சேர்ந்த கிஸ்ப்ளோ இன்கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் தன்னுடைய 10 ஆண்டுகள் நிறைவையொட்டி தன்னுடைய ஊழியர்களுக்கு பிஎம்டபிள்யு கார்களை பரிசாக வழங்கியுள்ளது. தன்னிடம் வேலை செய்யும் 5 ஊழியர்களுக்கு ரூபாய் 1 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யு செடான் வகை கார்களை பரிசாக வழங்கியுள்ளது. இந்த பரிசை யாரிடமும் தெரிவிக்காமல் திடீரென வழங்கியுள்ளனர்.
இது குறித்து பேசிய அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், எங்கள் நிறுவனம் தொடர்ந்து ஊழியர்களை அங்கீகரித்து வருகிறது. கட்டாய பணிநேரம் கிடையாது. அலுவலகம் வர பிடிக்கவில்லை என்றால் வீட்டில் இருந்தே பணி செய்யலாம். கார் பரிசாக பெற்ற ஊழியர்கள் கொரோனா போன்ற கடினமான காலங்களில் நிறுவனத்தை காப்பாற்றியவர்கள், மேலும் அவர்கள் நிறுவனம் ஆரம்பித்த முதல் இருந்தே வேலை செய்து வருகிறார்கள். மிகவும் ஏழ்மையான பின்னணியைக் கொண்டவர்கள் என்று தெரிவித்து இருந்தார்.
மேலும், ஐடியாஸ்2டி நிறுவனம் தன்னுடைய ஊழியர்களில் சிறந்த 100 பேருக்கு தலா ஒன்று வீதம் 100 மாருதி சுசூகி கார்களை வழங்கியுள்ளது. இது குறித்து கூறிய அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் இது நாங்கள் கொடுக்கும் பரிசு அல்ல, அவர்களின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார்.