ஒரு திரைப்பபடம் இதுதான் நான் என்று நம்மிடம் கூறியப்பின், அந்த ‘நானில்’ இல்லாத பிறவற்றை தேடுவது வீண்தானே! நான் உங்களை சிரிக்க வைக்க வருகிறேன், நான் உங்களை சிந்திக்க வைக்க வருகிறேன் இப்படியாக நான் என்ன என்பதை வெளிப்படையாக கூறி வரும் திரைப்படத்தை மாற்று கேவிகள் கேட்பது தேவைதானா? நான் உங்களை சிரிக்க வைக்க வருகிறேன் என்று கூறியப்பின் அந்த திரைப்படத்திடம் சென்று நீ ஏன் என்னை அழ வைக்கவில்லை என்ற கேள்வியை கேட்பது முறையா? அதே சமயம் கொடுப்பதாய் சொன்ன சிரிப்பை கொடுக்கவில்லையெனில் நாம் நம் கேள்வியை கேட்பது நன்றே! சிரிப்போடு மற்றவையும் கொடுத்தால் ஏற்கத்தக்கதுவே!
இப்படியாக நான் உங்களை சிரிக்க வைக்க போகிறேன் என்று கூறி ஹாட்ஸ்டாரில் வெளிவந்த திரைப்படம்தான், ‘கனகம் காமினி கலஹம்’ எனும் மலையாள திரைப்படம். கதைகளில் மிகவும் எளிமையாக நிகழக்கூடிய ஒன்றை எடுத்துக்கொண்டு அதை திரைக்கதையாக பின்னுவதில் தற்காலத்தில் இந்தியாவில் கெட்டிக்காரர்கள் யாரென்றால் அது மலையாள திரைத்துறைதான்.
ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருக்கும் கணவனும், ஒரு பிரபல சீரியலில் முன்பொரு காலத்தில் கதாநாயகியாக நடித்த மனைவியும் அடிக்கடி தங்களுக்குள் சண்டையிட்டு கொள்கிறார்கள். இச்சண்டைகளை விட்டு மகிழ்வுற்று இருக்க, எர்ணாகுளத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு செல்கிறார்கள். அங்கு நிகழும் மர்மங்களும், அதன் காரணங்களும்தான் கதையே!
மர்மங்கள் என்ற வார்த்தையை படித்தவுடன் இயல்பாய் எழும் திரில்லர் பக்கமோ, பேய்கள் பக்கமோ செல்ல வேண்டாம். சிரிப்புகளை தொடர்ந்து விதைக்கும் ஒரு கதைப்போக்கைதான் இப்படம் கொண்டுள்ளது. படம் ஆரம்பித்ததில் இருந்து அவ்வபோது திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை சிரிக்க வைத்த வண்ணம் உள்ளனர். சில இடங்களில் சறுக்கினாலும், பெரும் இடங்களில் வெற்றிபெற்று விடுகின்றனர். வெறும் வசன மொழிகளில் மட்டும் அல்ல, நடிப்பாலும் நகைச்சுவையை நமக்குள் கடத்துகின்றனர். சமயங்களில் படத்தின் அமைதி கூட படம் பார்ப்பவர்கள் சிரிக்க எதுவாக உள்ளது. உருவக்கேலிகள் இல்லாமல் வரும் நகைச்சுவை காட்சிகளை தற்போது பார்ப்பது அரிதாகிவிட்ட நிலையில், சில இடங்களை தவிர்த்து இப்படமும் அந்த அரிதில் இடம்பெறுகின்றன.
திரைப்படத்தை ஒரு ‘காமிக்’ கோணத்தில் அணுகி இருப்பதை போன்ற ஒரு தோற்றம் படம் பார்க்கும்போது நமக்குள் எழுகிறது. ஹோட்டலில் நடைபெறும் நீண்ட உரையாடல் காட்சிகள், தெருக்கூத்துகளின் போது நாம் பார்க்கும் நகைச்சவை நிகழ்வுகளை நினைவுபடுத்துகின்றன. நகைச்சுவையை மட்டும் நோக்கமாய் திரைப்படம் வைத்திருந்தாலும், அவ்வபோது சில வாழ்வியல் சார்ந்த நெறிமுறைகளையும் சொல்லிச் செல்கிறது.
இசை, ஒளிப்பதிவு, படத்தின் வண்ணங்கள் என அனைத்துமே கதையில் நிகழும் நகைச்சுவையை மேலும் மெருகேற்ற உதவிகரமாய் இருந்திருக்கிறது. அதிகப்படியான நகைச்சுவையை சார்ந்து படம் நகருவதால் சில இடங்களில் நிகழும் சிறிய சறுக்கல்கள் கூட அந்தந்த காட்சிகளில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன. ஆனால் அந்த கட்சிகள் மறைந்ததும், அந்த சறுக்கல்களும் மறைந்து விடுகின்றன.
நிவின் பாலி முன்னணி கதாப்பாத்திரமாக அசத்தியிருக்கிறார். கிரேஸ் ஆன்டணி ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார். வினய் போர்ட் நூறு சதவீதம் கதாப்பாத்திரமாக மட்டுமே தெரிகிறார். கதை மாந்தர்களை பொறுத்த வரையில் யாருமே ஒரு படி மேலோ, ஒரு படி கீழோ நடித்ததாக நமக்கு தோன்றா வண்ணம்தான் கதை முடியும்வரை திரைக்கதை நகருகிறது.
ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நகைச்சுவையை நேரடியாக முன் வைத்து இதுதான் நான் என வெளிவந்த கனகம் காமினி கலஹம் திரைப்படம் தற்போது ஹாட்ஸ்டாரில் ஓடிகொண்டிருக்கிறது. நகைச்சுவையை விரும்பி பார்பவர்கள் நிச்சயம் பார்க்கலாம்.
இதையும் படிங்க: சுற்றுலா பயணிகளிடையே தாவிக் குதித்து அன்பை பகிரும் சிங்கக் குட்டி! வைரல் காணொளி