ஐந்தாவது ஐபிஎல் தொடருக்கான ஏலம் நாளை நடைபெற உள்ளது. இந்த ஏலத்தின் மீதான ஆர்வம், முந்தைய ஏலங்களை விட பல முறை அதிகரித்துள்ளது. எதிர்பார்ப்புகளை உருவாக்கும் இந்த ஏலம் நாளை பெங்களூருவில் உள்ள ஐடிசி கார்டீனியா விடுதியில் நடைபெறுகிறது. நண்பகல் 12 மணிக்கு ஏலம் தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் இது நேரடியாக ஒளிபரப்பாக இருக்கிறது.
இம்முறை நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டியில் பத்து அணிகள் பங்கேற்க இருக்கின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் இம்முறை ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கின்றன.
ரீடெயினிங் எனப்படும் தக்கவைத்தல் நிகழ்வு ஏற்கனவே அரங்கேற, அதன் மூலம் எட்டு அணிகள் 24 வீரர்களை தக்கவைத்துள்ளன. புதிய அணிகளும் மூன்று வீரர்கள் வீதம் ஆறு வீரர்களை தேர்வு செய்துள்ளனர். இதன்படி மொத்தம் 30 வீரர்களை அணிகள் தக்கவைத்துள்ளன.
நடைபெற இருக்கும் ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் ரூபாய் 90 கோடி அளவுக்கு வீரர்களை ஏலம் எடுக்கலாம். ஆனால், தங்கள் அணிகளில் வீரர்களை தக்கவைக்க ஏற்கனவே குறிப்பிட்ட தொகையை அணிகள் செலவு செய்திருப்பதால், மீதமுள்ள தொகையை கொண்டே இந்த ஏலத்தில் அணிகள் வீரர்களை ஏலம் எடுக்க முடியும்.
அதன்படி, பெங்களூர் அணியிடம் ரூ.57 கோடியும், மும்பை அணியிடம் ரூ.48 கோடியும், பஞ்சாப் அணியிடம் ரூ.72 கோடியும், ஹைதராபாத் அணியிடம் ரூ.68 கோடியும், சிஎஸ்கே அணியிடம் ரூ.48 கோடியும், டெல்லி அணியிடம் ரூ.47.5 கோடியும், கொல்கத்தா அணியிடம் ரூ. 48 கோடியும், ராஜஸ்தான் அணியிடம் ரூ. 62 கோடியும் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் ரூ.52 கோடியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம் ரூ.59 கோடியும் மீதமுள்ளன.