ஐபிஎல் தொடர் மிகவும் சிறப்பாக நடந்துக்கொண்டு வருகிறது. ஐபிஎல் போட்டிகளை நேரில் காண நினைத்தவர்களுக்கு இம்முறை ஏமாற்றமே மிஞ்சியது. ஆம்! கொரோனா தொற்றுக்காரணமாக இருபது விழுக்காடு பார்வையாளர்கள் மட்டுமே மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், தற்போது 50 விழுக்காடு பார்வையாளர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் குதூகலத்துடன் காணப்படுகின்றனர்.
நேற்றைய ஆட்டம்
நேற்று நடைபெற்ற கொல்கத்தாவுக்கும் பெங்களூருக்கும் இடையிலான ஐபிஎல் போட்டியில், பெங்களூர் அணி வெற்றிப்பெற்று இந்த ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
பெங்களூர் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. சரியான தேர்வால் கொல்கத்தா அணியை 18.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டையும் இழக்கச்செய்தது, பெங்களூர் அணி. மொத்தமாக கொல்கத்தா அணி 128 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி, சற்றுத் தடுமாறியது என்றே சொல்ல வேண்டும். இந்த எளிதான இலக்கை பெங்களுர் அணியானது 19.2 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்தே அடைந்தது.
வனிந்து அசரங்கா பெங்களுர் அணித் தரப்பில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இன்றைய ஆட்டம்
நேற்றைய ஆட்டங்கள் இப்படியாகச் செல்ல, ஐபிஎல் தொடரின் இன்றைய ஏழாவதுப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளது. கே எல் ராகுல் தலைமையில் லக்னோவும், ஜடஜா தலைமையில் சென்னையும் இன்று களம்காண உள்ளது.
இரு அணிகளுமே தங்களின் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியதால் இம்முறை வெற்றியை எட்டியாக வேண்டும் என்ற முனைப்பில் விளையாடுவர். மேலும் இரு அணிகளும் முதல்முறை மோதிக்கொள்வதால் ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்படும் என்றே கணிக்கப்படுகிறது.
புள்ளிப்பட்டியலில் லக்னோ அணி ஏழாவது இடத்திலும், சென்னை அணி எட்டாவது இடத்திலும் உள்ளது. கடந்த முறை இரு அணிகளுமே தங்களின் பேட்டிங்கில் சொதப்பிய காரணத்தினால் தோல்வியைத் தழுவியது. ஆதலால், இம்முறை இரு அணிகளும் பேட்டிங்கில் கவனம் செலுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும், சென்னை அணியைப் பொறுத்தவரையில் கடந்தப்போட்டியின் போது மகேந்திர சிங் தோனி அரைசதம் அடித்து ஆறுதலாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதும் போட்டியானது மும்பையில் உள்ள பிரபார்ன் மைதானத்தில் இஇன்று இரவு 7:30 மணியளவில் நடைபெற இருக்கிறது.