சர்வதேச மூத்த கபடிவீரரான சந்தீப் நங்கல் பஞ்சாபில் நடந்த கபடிப்போட்டியின் போது மர்மகும்பலால் கடந்த மார்ச் 14ஆம் தேதி திங்கள் கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.
சந்தீப் சிங் சந்து என்ற சந்தீப் நங்கல் அம்பியான், 38 வயதான சர்வதேச கபடி விளையாட்டு வீரரான இவர் அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்காக விளையாடி உள்ளார். இவரது தலைமையில் இங்கிலாந்து அணி பல சர்வதேச கபடிப்போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இங்கிலாந்திலேயே தன்னுடைய பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வரும் இவர் ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியா வருவது வழக்கம். அதேபோல, இந்த ஆண்டும் பஞ்சாப் ஜலந்தரில் உள்ள மல்லியான் கிராமத்தில் நடைபெறும் கபடிப்போட்டியில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்திருந்தார்.
சம்பவத்தன்று மாலை நடைபெற இருந்த கபடிப்போட்டியில் பங்கேற்பதற்காகக் களத்தில் தன் அணியினருடன் காத்திருந்தார். அப்பொழுது, அங்கு நுழைந்த மர்ம கும்பல் சந்தீப் நங்கலைப் பார்த்து சரமாரியாகத் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். சுமார் இருபது சுற்றுகள் அவரை நோக்கி சுடப்பட்டதாக நேரில் பார்த்தவர்களால் கூறப்படுகிறது. இதனால் நிலை குலைந்த சந்தீப் நங்கல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துப்பாக்கி சூட்டைப் பார்த்து போட்டியைக் காண வந்த பொதுமக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அலறியடித்துக்கொண்டு ஓடினர். சரமாரியாக சுட்டதில் ஒரு சிறுவனுக்கும் துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டது. அதிஷ்டவசமாக அந்த சிறுவனின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. இந்த கோரநிகழ்வானது மாலை 6.15 முதல் 6.30 மணிக்குள் அரங்கேறியது.
இந்தச் சம்பவம் நடந்த உடனே அவ்விடத்துக்கு விரைந்த ஜலந்தர் துணைக் காவல் கண்காணிப்பாளர் லக்விந்தர் சிங், இது முன்விரோதத்தால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட படுகொலை என உறுதி செய்தார். மேலும், சந்தீப் நங்கலின் உடலில் கண்மூடித்தனமாக சரமாரியாக சுட்டதால் 8 முதல் 10 குண்டுகள் பாய்ந்திருக்கலாம் எனவும் கூறினார். கபடிப்போட்டிகளில் உள்ளூர் ரவுடிக்கும்பல்கள் பல இலட்ச மதிப்பிலான பணத்தை முதலீடு செய்திருப்பதாகவும், யார் எந்த அணிக்காக விளையாட வேண்டும் சென்ற தகராறில் இந்த வெறிச்செயல் அரங்கேறியிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய அருமையான தடகளத் திறமையால், கபடி உலகில் கோலோச்சி வந்த சந்தீப் நங்கல் சர்வதேச அளவில் தவிர்க்க முடியாத வீரராக முத்திரை பதித்திருந்தார். அவரது இந்த திடீர் மரணம் கபடி ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை உருவாக்கி உள்ளது.