உலக பேட்மிண்டன் இறுதி போட்டிகளில் இருந்து பி.வி.சிந்து விலகுவதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி அடுத்த மாதம் டிசம்பர் 14-ஆம் தேதி முதல் சீனாவின் குவாங்சோவ் நகரில் நடக்கவுள்ளது. பேட்மிண்டன் ரசிகர்களுக்கு இடையே மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்போட்டியானது நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இந்த போட்டியில் இருந்து உலகின் 5-ம் நிலை வீராங்கனையும், முன்னாள் சாம்பியனுமான இந்தியாவின் பி.வி.சிந்து விலகியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பி.வி.சிந்துவுக்கு இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாகவே தற்போது நடைபெறவுள்ள உலக பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்கவில்லை.
‘காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய கொஞ்ச நாட்கள் ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன் அடிப்படையில் அவர் இந்த விலகல் முடிவை எடுத்துள்ளதாகவும், ஏற்கனவே பயிற்சியை தொடங்கிவிட்ட சிந்து ஜனவரி மாதம் நடக்கும் போட்டிகளுக்கு முழு உடல்தகுதியுடன் இருப்பார்’ என்று அவரது தந்தை பி.வி.ரமணா நேற்று தெரிவித்தார்.
மேலும், அடுத்த வருடம் அதிகளவிலான போட்டிகள் நடைபெறவுள்ளதால், அதற்காக தன்னை பி.வி.சிந்து முழுமையாக தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: லிவர்பூல் கால்பந்து அணியை வாங்க திட்டமிடுகிறாரா முகேஷ் அம்பானி?