இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை இரண்டு ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளது. முதலாவது ஒரு நாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வியைத் தழுவிய நிலையில், இரண்டாம் ஒரு நாள் போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது.
கே எல் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் அவர்களின் பேட்டிங்கால் இந்திய அணி ஐம்பது ஒவர்களுக்கு 239 ரன்கள் சேர்க்க, 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மேற்கிந்திய தீவுகள் அணி தனது பேட்டிங்கை தொடங்கியது. பெரிய இலக்கு இல்லை என்பதனால், மேற்கிந்திய தீவுகள் அணி வென்றுவிடும் என்ற கணிப்பு பலரிடத்தில் இருந்தது.இருந்தது.
ஆனால், இந்திய பவுலர்களின் அசாத்திய பந்து வீச்சால் மேற்கிந்திய தீவுகள் அணி 44 ஒவர்களில் 193 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ப்ரூக்ஸ் 44 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா வென்றது.
இந்த ஒரு நாள் போட்டியில் பிரசித் கிருஷ்ணா மிகச்சிறப்பாய் பந்து வீசினார். ஒன்பது ஓவர்கள் வீசிய பிரசித் கிருஷ்ணா 12 ரன்களை மட்டுமே கொடுத்து நான்கு விக்கெட்டுகளை எடுத்தார்.
இப்போட்டியில், ரிஷப் பந்த் தொடக்க வீரராக களமிறங்கியது, பிரசித் கிருஷ்ணாவிற்கு ஓவர்கள் கொடுக்கப்பட்ட விதம், கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் விளையாடியது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இம்முயற்சிகள் பலரிடத்தில் வரவேற்பையும், அதே சமயம் எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்றுவருகின்றன.