இன்று இந்திய அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி இதற்கு முன்பு விளையாடிய இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் இந்தியாவிடம் தோல்வியடைந்து இத்தொடரையும் இழந்தது.
இந்நிலையில், ஆறுதல் வெற்றியை பெற வேண்டும் என்ற நோக்கில் இன்று மேற்கிந்திய தீவுகள் அணி விளையாட ஆரம்பித்தது. டாஸ் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கை கொடுக்காமல் போக, இந்திய டாசை வென்று பேட்டிங் தேர்வு செய்தது. கடந்த இரு போட்டிகளிலும் விளையாடாமல் இருந்த ஷிகர் தவான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இன்றைய போட்டிகளில் விளையாடினர்.
இந்தியா டாஸ் வென்றாலும், தொடக்க ஜோடியான ரோஹித் சர்மா, தவான் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்ப, விராட் கோலி டக் அவுட் ஆகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் விராட் கோலி சொற்ப ரன்களிலேயே வெளியேறியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பந்த் கூட்டணி இந்திய அணியை தாங்கி பிடிக்க இருவருமே அரை சத்தத்தை கடந்தனர். இந்திய அணியின் ஸ்கோர் 152 ஆக இருக்கையில் ரிஷப் பந்த் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின்பு ஸ்ரேயாஸ் ஐயர் 80 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதன்பின்பு வந்த வாஷிங்டன் சுந்தரும் தீபக் சஹாரும் கொஞ்சம் ரன்களை சேர்க்க இந்திய அணி 265 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மேற்கிந்திய தீவுகள் அணி 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.