நம் வாழ்வின் அற்புத நாட்கள் எப்போதுமே நம் நினைவில் இருக்கும். காலங்களைத் தாண்டியும் அற்புத நாட்களில் நாம் உணர்ந்த உணர்வுகளின் நினைவலைகள் மனதுக்குள் அழகியலாய் இருந்துக் கொண்டிருக்கும்.
தனிப்பட்ட நபரின் தனிப்பட்ட அற்புத நாளுக்கே ஆர்ப்பரிப்புகளும், ஆனந்தங்களும் அதிகம் எழும். ஒரு தனிப்பட்ட மனிதரின் அற்புத நிகழ்வுகளுக்கே இப்படியென்றால், ஒரு நாடே பெருமைப்படும் அளவிற்கு நிகழ்ந்த அற்புத நாளை நினைவு கூறுவதில், ஆழத்துடன் கூடிய அழகிய உணர்வு எட்டிப்பார்க்கும்.
உலக கோப்பை
அப்படியான ஒருநாள்தான் இன்று. ஆம்! 28 வருடங்களுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியானது 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற நிகழ்வு அரங்கேறிய நாள் இன்றுதான்.
2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் இரண்டாம் தேதி, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிக முக்கியமான நாளாகவே இருந்து வருகிறது.
உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் சேவாக், சச்சின் ஆகியோர் தங்களின் விக்கெட்டுகளை பறிகொடுத்தப் பின் அனைத்து இந்தியர்களின் உள்ளுக்குள்ளும் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பயம் எழுந்தது. ஆனால் அதன் பிறகு வந்த கம்பீர், கோலியின் உதவியுடன் நிதானமாகி தோனியின் ஆட்டத்தால் வெற்றிவாகை சூடியதை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எவரும் மறக்க மாட்டார்கள்.
உலக கோப்பை இறுதிப்போட்டியில் தோனி சிக்சர் அடிக்கும்போதே இந்தியர் பலரும் உணர்ச்சிவசத்திற்கு உள்ளாகினர். தொலைக்காட்சியில் போட்டியை கண்டவர்களில் பலரும், அரங்கத்தில் போட்டியைக் கண்டவர்களில் பலரும் ஆனந்தக்கண்ணீர் விட்டதை எவரும் அவ்வளவு எளிதில் மறக்க இயலாது.
இந்திய அணி கையில் உலக கோப்பையை ஏந்துகையில் ஒட்டுமொத்த இந்தியாவுமே தலைநிமிர்ந்தது என்றுதான் கூற வேண்டும். இந்த வெற்றிக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் வாரியம் அடைந்த வளர்ச்சி என்பது அசுரவிதமானது.
உணர்வுப்பூர்வமான வெற்றி
உணர்வுப்பூர்வமான மகிழ்ச்சியை, ஆனந்த கண்ணீரை, அன்பின் வார்த்தைகளை, சுயம் தாண்டிய மகிழ்தலை, நம்பிக்கையை ஒரு வெற்றி தரும் என்பது அன்றுதான் பலருக்கும் விளங்கியது.
உணர்வுப்பூர்வமாக பெறப்படும் வெற்றியின் தனித்த சுவையுடையது. அதை பல இந்தியர்களும் அன்று சுவைத்தார்கள் என்றே சொல்ல வேண்டும். 2011 உலக கோப்பைத் தொடரில் இந்திய அணி பல சோதனைகளைக் கடந்துதான் சாதனையைப் படைத்தது.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்ல, இந்திய கிரிக்கெட் வீரர்களும் இந்த வெற்றி நாளை நினைவுக்கூறியபடியே தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் உணர்வுப்பூர்வமான பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.