மகளிருக்கான ஒருநாள் உலக கோப்பை போட்டியானது நியுசிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்தியா உட்பட மொத்தம் எட்டு அணிகள் இப்போட்டியில் பங்கேற்று விளையாடி வருகின்றன. மிகவும் பரபரப்பாக சென்றுக்கொண்டிருந்த உலக கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளில் இன்று இந்திய அணி, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிருதி மந்தனாவும்,யாசுதிகா பாட்யாவும் களம் இறங்கினர். நிதானமாக இருவரும் ரன்களை சேர்க்க யாசுதிகா 31 ரன்கள் சேர்த்த சமயத்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார். இதற்கு அடுத்து வந்த இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஐந்து ரன்களுக்கு வெளியேறி தனது மோசமான ஃபார்மை தொடர்ந்தார். அடுத்து வந்த தீப்தி சர்மாவும் விரைவாக பெவிலியன் திரும்பினார். இரண்டு விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபுறம் ஸ்மிருதி மந்தனா தெளிவான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.
ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்து ஆட ஆட்டக்களத்திற்கு ஹர்மன்ப்ரீத் கவுர் வருகை புரிந்தார். பின்னர் இவர்களின் இணை, மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சாளர்களை வாட்டி வதைத்துவிட்டது. இருவரும் போட்டி போட்டுக்கொண்டு ரன்களை சேர்க்க, இருவரும் சதம் அடித்தனர்.129 ரன்கள் அடித்திருந்த போது ஸ்மிருதி மந்தனா தனது விக்கெட்டை இழந்தார். ஹர்மன்ப்ரீத் கவுர் 109 ரன்கள் சேர்த்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இவர்கள் இருவரின் வலிமையான ஆட்டத்தால் இந்திய அணி 317 என்ற வலுவான ஸ்கோரை எட்டியது.
இருப்பினும், மேற்கிந்திய தீவுகள் அணி எப்போதும் கணிக்க முடியாத அணியாகவே இருந்து வருவதால், இந்திய அணி பந்துவீச்சில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டியுள்ளது. தற்போது மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங் செய்து வருகிறது.