தமிழகத்தை சமீப காலமாகவே பரபரப்பாக வைத்திருந்த தேர்தல் களம் தனது முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. நாளை தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. பலத்த பாதுகாப்புடன் இத்தேர்தலை நடத்த பல முன்னேற்பாடுகள் நிகழ்ந்து வருகின்றன.
இந்நிலையில், நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க தேவையான ஆவணங்கள் குறித்து காண்போம்!
முதலில் பூத் சிலிப் எனப்படும் வாக்குச்சாவடி சீட்டிற்கும் வாக்காளர் அடையாள அட்டைக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதே சமயம், இவையிரண்டும் இல்லையெனினும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, தேர்தல் ஆணையத்தால் 11 ஆவணங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், அனுமதிக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அந்த பதினொரு ஆவணங்கள் பின்வருமாறு;
ஆதார் அட்டை, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்கு அட்டைகள், மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு உள்ளிட்டவை வாக்களிக்க தகுதியான ஆவணங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, தேசிய மக்கள் பதிவீட்டின் கீழ் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் உள்ளிட்டவற்றை காண்பித்தும் வாக்களிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.கூறப்பட்டுள்ளது.
மேலும், மத்திய மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட பணி அடையாள அட்டைகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டைகளும் அனுமதிக்கப்பட்ட ஆவணங்களில் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.