பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைப்பதைவிட மரணத்தை மேலானதாகக் கருதுவேன் என பீகார் முதல்வர் தெரிவித்துள்ளார்.
பீகாரில் பாஜக ஆதரவுடன் முதல்வராக வளம் வந்த நிதீஷ் குமார் கடந்த ஆகஸ்ட் மாதம் பாஜகவுடன் வைத்திருந்த கூட்டணியில் இருந்து விலகி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தார்.
இதையடுத்து பாஜகவுக்கு எதிராக நிதீஷ் குமார் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக வருகிற 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து வருகிறார்.
இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளம் தலைவரான நிதீஷ் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், ஐக்கிய ஜனதா தளம் கட்சி மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை என்றும், பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைப்பதைவிட தான் மரணத்தைத் தழுவுவதை உயர்வானதாகக் கருதுவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பாஜகவின் இந்துத்துவ கொள்கையை முஸ்லிம்கள் விரும்புவதில்லை என்றும், இதன் காரணமாக கூட்டணி அமைக்கும் கட்சிகள் வசம் உள்ள வாக்குகளை பெற பாஜக முயற்சி செய்யும் என்றும் தெரிவித்தார்.
முக்கியமாக ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளிடம் உள்ள முஸ்லிம் வாக்குகளை பாஜக பெற்று வந்ததாகவும் நிதீஷ் குமார் தெரிவித்தார்.
பீகாரில் இருக்கும் 40 மக்களவைத் தொகுதிகளில் 36 இடங்களில் வெற்றி பெறுவோம் என பாஜக கூறி வருவதாகவும், ஆனால் உண்மையில் அது நடக்காது எனவும், பீகாரில் பாஜகவுக்கு படுதோல்வியே பரிசாகக் கிடைக்கும் எனவும் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டும் பாஜக கூட்டணிக்கு தான் திரும்பியது மிகப்பெரிய தவறு எனவும், அந்த சமயம் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர்கள் லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மீது அடிப்படை ஆதாரம் இல்லாமல் கூறப்பட்ட குற்றச்சாட்டை நம்பி தான் அந்தக் கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் கூட்டணி வைத்ததாகவும், அது மிகப்பெரிய தவறு என்றும் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்தார்.
குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவண படத்துக்கான தடையை எதிர்த்து மனுக்கள்; விரைவில் விசாரணை!