ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.
இயக்குநரும் பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய வழக்கில், வீட்டில் வேலை செய்த பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுநர் வெங்கடேசன் ஆகிய இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட ஈஸ்வரியிடமிருந்து 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வீட்டு சொத்து ஆவணங்கள் போன்றவை போலீசாரால் தற்போது வரை பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து மேற்கொண்டு வரும் விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி, கைது செய்யப்பட்ட வெங்கடேசனிடம் ரூ.9 லட்சம் ஈஸ்வரி கொடுத்துள்ளார் என்ற தகவல் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இத்துடன் ஈஸ்வரி தனது கணவர் அங்கமுத்து பெயரில் வங்கி கணக்கில் 350 கிராம் தங்க நகைகளை அடகு வைத்துள்ளதும், சோழிங்க நல்லூர் பகுதியில் வீடு வாங்கியிருப்பதும் தெரிய வந்துள்ளது.
விசாரணையின் திருப்பு முனையாக, ஈஸ்வரி திருடியது மற்றும் சோழிங்கநல்லூர் பகுதியில் வீடு வாங்கியது என எதுவும் அங்கமுத்துக்கு தெரியாத வகையில் ஈஸ்வரி செயல்பட்டு வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சோழிங்கநல்லூர் பகுதியில் வீடு வாங்கியது குறித்து ஈஸ்வரி தனது வீட்டில், ‘வாங்கிய வீடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது பெயரில் பினாமியாக வாங்கியதாகவும் வெளி உலகத்திற்கு இது நமது வீடு எனவும், உண்மையில் இந்த வீடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு சொந்தமானது.இது குறித்து யாரிடமும் வெளியில் சொல்லக்கூடாது’ எனவும் கூறியுள்ளார்.
தற்போது காவல்துறையினர் வங்கி கணக்கில் அடகு வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளை மீட்க முயற்சிகள் எடுத்து வருகின்றனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
‘அகநக அகநக முகநகையே’ – 60 லட்சம் பார்வைகளைத் தாண்டும் பொன்னியின் செல்வன்..