ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் 8வது சீசன் கோவாவில் நடைபெற்று வந்தது. நேற்று இந்தத் தொடரின் இறுதிப்போட்டி கோவாவில் உள்ள படோரா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதன் முதலாக கோப்பையை வெல்லும் முனைப்பில் ஹைதராபாத் அணியும், கேரளா அணியும் கடுமையாக மோதிக்கொண்டன.
இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி, கோல்கம்பத்தை நெருங்கி வந்தார்களே தவிர யாராலும் கோல் அடிக்க முடியவில்லை. முதல் பாதியில் பந்து அதிக நேரம் கேரள வீரர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இதன் பலனாக, 68வது நிமிடத்தில் கேரளாவின் ராகுல் கோல் அடித்தார். அவர் அடித்த பந்து ஹைதெராபாத் அணியின் அனுபவமிக்க கோல்கீப்பர் கட்டிமணியையே ஏமாற்றி கோல்கம்பத்திக்குள் புகுந்தது.
கோலை ஈடு செய்ய ஹைதராபாத் வீரர்கள் கடுமையாகப் போராடினர். ஆட்டம் கிட்டத்தட்ட முடியும் நிலையில் இருந்தபொழுது அனைவரின் மனநிலையும் கேரளாதான் வெற்றிபெறப்போகிறது என்ற நிலையில் இருந்தது. ஆனால், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், ஹைதராபாத் அணியின் சாஹில் டாவோரா 88வது நிமிடத்தில் கோல் அடித்தார். தோற்கும் தருவாயில் இருந்த ஹைதராபாத் அணிக்கு புத்துயிர் கொடுத்த இந்த கோல் மூலம் கூடுதலாக கிடைத்த 4 நிமிடங்களில் கடுமையாக போராடியும் கோல் கிடைக்காததால் ஆட்டம் ( 1-1 ) என்ற கோல்கணக்கில் முடிவடைந்தது.
இறுதி ஆட்டம் என்பதால் வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்க மேலும் 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. ஏற்கனவே, 94 நிமிடங்களுக்கும் மேல் விளையாடியதால் கடும் களைப்பில் இருந்த வீரர்களால் இந்த பாதியும் கோல் இன்றியே முடிவுக்கு வந்தது.
இதனால் ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டுக்குச் சென்றது. ஹைதராபாத் அணிக்காக அனுபவம் வாய்ந்த லட்சுமிகாந்த் கட்டிமணியும், கேரள அணிக்காக ப்ரசுக்கான் கில்லும் கோல்கீப்பர்களாகக் களமிறங்கினர்.
கேரளாவின் முதல் ஷூட் அவுட்டில் மார்கோ லெஸ்கோவிக் அடித்த பந்தை கட்டிமணி அற்புதமாக தடுத்து நிறுத்தினார். மறுமுனையில், ஹைதராபாத்தின் ஜாவோ விக்டர் கோல் அடிக்க ஹைதராபாத் 1-0 என முன்னிலை பெற்றது. கேரளா சார்பாக இரண்டாவது ஷூட் அவுட்டுக்கு வந்த நிஷூ குமார் அடித்த பந்தை கட்டிமணி தடுத்து நிறுத்த, அது ஃபவுல் ஆனதால் நிஷூ குமாருக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், முன்பு போலவே இந்த பந்தையும் அடித்து வீணாக்கினார்.
அடுத்த ஷூட் அவுட்டில் கேரளாக்கு ஆயுஷ் அதிகாரியும், ஹைதெராபாத் அணிக்கு காஷா கமாராவும் கோல் அடிக்க 2-1 என்ற நிலைக்கு ஆட்டம் சென்றது. அடுத்து வந்த கேரளாவின் ஜீக்ஸன் சிங்கின் கோல் தடுத்து நிறுத்தப்பட, கோல் அடித்தால் கோப்பையை அடிக்கலாம் என்ற நிலையில் வந்த ஹைதராபாத் அணியின் ஹலிச்சரண் கோல் அடிக்க முதல் முறையாக ஹைதராபாத் அணி கோப்பையைத் தட்டி சென்றது.
பெனால்டி ஷூட் அவுட்டில் பந்தை நிறுத்துவதே கடினம் என்ற நிலையில், கட்டிமணி மூன்று கோல்களை தடுத்து நிறுத்தி தன் அனுபவத்தை நிருபித்துக் காட்டினார். 6 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப்போட்டிக்கு வந்த கேரளா அணி 2014 மற்றும் 2016 ஆண்டுகளைப் போலவே இந்த முறையும் இறுதியில் தோற்று இரண்டாம் இடம் பெற்றது. இந்தத் தொடரில் அதிகபட்சமாக 18 கோல்களை அடித்த ஹைதராபாத் அணியின் மூத்த வீரரான ஒக்பச்சே தங்கக் காலணி விருதை தட்டிச் சென்றார்