தனது, காதல் கணவர் அர்னவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாக பிரபல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வரும் நடிகை திவ்யா வெளியிட்டுள்ள காணொளி தற்போது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் ‘செவ்வந்தி’ தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் கர்நாடகத்தை சேர்ந்தவர். ‘கேளடி கண்மணி’ என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர். பிரபல தொடரான மகராசியில் இவர் நடித்திருந்தார்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த நைனா முகமத் என்பவர் ‘அர்னவ்’ என்ற பெயரில் தற்போது ‘செல்லம்மா’ என்கிற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், திவ்யாவுக்கு அர்னவ்வுடன் கடந்த 2017 ஆம் ஆண்டில் தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு, இவர்கள் இருவரும் லிவ்-இன்னில் வாழ்ந்து வந்தனர். பின், திவ்யாவின் கட்டயாத்தின் பேரில், இவர்கள் இருவரும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, தற்போது கணவர் தன்னை துன்புறுத்துவதாக திவ்யா காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது கணவர் அர்னவ் அடித்து தன்னை துன்புறுத்துவதாகவும், இதனால் தனது கருக்கலையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போது கர்ப்பிணியான நடிகை திவ்யா சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் திருவேற்காடு காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்யபட்டுள்ளது.
ஃலவ் ஜிகாத்தால் பாதிக்கப்பட்ட சீரியல் நடிகை திவ்யா
வீடியோ வெளியிட்டு ஆதரவு கேட்கிறார். pic.twitter.com/DxyUY7HuyT
— Jayam Sk Gopi (Jsk Gopi) (@JSKGopi) October 6, 2022
இதனிடையே, நடிகை திவ்யாவின் குற்றச்சாட்டுக்களை அவரது கணவர் அர்னவ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதில் அர்னவ், ‘தன் மனைவி மூன்று மாதக் கருவைக் கலைக்க நாடகம் ஆடுவதாகக் கூறியுள்ளார். மேலும் தனது மனைவியின் நண்பரான ஈஸ்வர் துணையுடன் இவ்வாறு அவர் நடந்து கொள்வதாகவும், திவ்யாவை தாக்கவில்லை என்றும், அவர் கூறும் நேரத்தில் தான் வீட்டில் இல்லயென்றும், அதற்கான ஆதாரம் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் இருப்பதாகவும்’ தெரிவித்துள்ளார்.
நடிகை திவ்யாவின் இந்தச் சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.