நம் அனைவருக்கும் தேங்காயின் நன்மைகள் பற்றி நன்றாகவே தெரிந்திருக்க வாய்ப்புண்டு. அதன் நன்மைகள் முழுமையாக பெற்றிட சிலர் தேங்காய் பாலினை தினசரி அருந்துபவர்களும் உண்டு. இந்த தேங்காய்ப்பாலில் சுவையான பிரிஞ்சி சாதமும் செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி – 2கப்
வெங்காயம் – 3
இஞ்சிப்பூண்டு விழுது – 2ஸ்பூன்
ப மிளகாய் – 5 (அரைத்துக்கொள்ளவும்)
ப பட்டாணி – 1/4கப்
கேரட் – 1
பீன்ஸ் – 8
உ கிழங்கு – 1
மீல் மேக்கர் – தேவைக்கேற்ப
ஏலக்காய் – 3
சோம்பு – 1 டீஸ்பூன்
பட்டை – 1/2 இன்ச்
லவங்கம் – 4
நட்சத்திர சோம்பு – 2
பிரிஞ்சி இலை -2
முந்திரி – 10
தேங்காய் – அரை மூடி
புதினா – கையளவு
கொத்தமல்லி – கையளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
நெய் – 1ஸ்பூன்
செய்முறை :
பாசுமதி அரிசியை நன்கு கழுவி அரை மணி நேரம் ஊறவைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரிஞ்சிஇலை ,ஏலக்காய், சோம்பு,பட்டை, லவங்கம், முந்திரி, நட்சத்திர சோம்பு போட்டு தாளித்ததும், வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த பச்சை மிளகாய் மற்றும் இஞ்சிப்பூண்டு விழுதை சேர்க்கவும். இவை அனைத்தையும் அடிப்பிடிக்காதவாறு வதக்கவும். வதங்கியதும் நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு காய்களுடன் பச்சை பட்டாணியையும் சேர்க்கவும். காய்கள் இந்து நிமிடம் எண்ணெய்யில் வதங்கியதும்,சுடுநீரில் ஊறவைத்த மீல் மேக்கர் சேர்க்கவும். இதனுடன் கைப்பிடி புதினா தழைகளை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பின்பு அரை மூடி தேங்காயை மிக்ஸியில் நன்றாக அரைத்து தேங்காய்ப்பால் எடுத்துக் கொள்ளவும். 2கப் பாசுமதி அரிசிக்கு 3கப் தேங்காய்ப்பால் அளந்து ஊற்றவும். ருசிக்கேற்ப தேவையான அளவு உப்பு சேர்த்து, கடைசியாக கொத்தமல்லி மற்றும் ஒருஸ்பூன் நெய் விட்டு குக்கரை மூடவும். குக்கர் 2 விசில் வந்ததும் மிதமான தீயில் இந்து நிமிடங்கள் வைத்திருந்து அடுப்பை அணைக்கவும். இப்பொழுது சுவையான தேங்காய்ப்பால் பிரிஞ்சி சாதம் தயார்.