சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணி முதலில் டாஸ் வென்றது. டாஸ் வென்ற சென்னை அணியானது பந்துவீச்சைத் தேர்வு செய்தது ஆகவே, மும்பை பேட்டிங் செய்யத் தொடங்கியது.
மும்பை அணியின் பேட்டிங்
ஆரம்பத்திலேயே மும்பை அணி பெரிய தடுமாற்றத்திற்கு உள்ளானது. ஆம்! தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷன் கிஷான் ஆகியோர் டக் அவுட்டாகி அனைவருக்கும் அதிர்ச்சியளித்தனர். சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மும்பை அணி கடுமையாக திணறியது என்றே கூற வேண்டும்.
மும்பை அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளை சிறிய இடைவெளியிலேயே சென்னை அணியின் பந்துவீச்சாளர் முகேஷ் சௌத்ரி கைப்பற்றினார். இதன்பிறகு களமிறங்கிய, சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மாவின் ஆறுதல் ஆட்டத்தினால், இருபது ஓவர்களின் முடிவில் மும்பை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சென்னை அணியின் பேட்டிங்
இதனையடுத்து, 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது, சென்னை சூப்பர் கிங்ஸ்! ருத்ராஜ் கெய்கவாட் டக் அவுட் ஆக சென்னை அணியும் ஸ்தம்பித்தது. ஆனால் ராபின் உத்தப்பா மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் சீராக விளையாடி இலக்கை அடைய முற்பட்டனர். ஆனால், இருவரும் 30 மற்றும் 40 ரன்கள் முறையே தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.
அடுத்தடுத்து சிவம் துபேவும், ரவீந்திர ஜடஜாவும் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் மும்பை அணியின் பக்கம் வெற்றி மடைமாறியதாய் தோன்றிற்று. ஆனால் அப்படி இல்லை என்பதை தனது அபார ஆட்டத்தால் நிரூபித்தார், எம்.எஸ்.தோனி.
இறுதி நிமிடங்கள்
18 பந்துகளுக்கு 42 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், உனத்கட் வீசிய ஓவரில் தோனி பவுண்டரியும், டுவைன் பிரெடோரியஸ் சிக்ஸரும் விளாசினர். சில ஓட்டங்களையும் இருவரும் எடுத்தனர்.
இதனால் 12 பந்துகளுக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. 19 ஆவது ஓவரை பும்ரா வீசி 11 ரன்கள் விட்டுக்கொடுத்தார். டுவைன் பிரெடோரியஸ் இரு பவுண்டரிகளை அடித்து தேவைப்படும் ரன் ரேட்டை குறைத்தார். கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இந்த ஓவரை வீச உனத்கட் வந்தார்.
இறுதி ஓவரின் முதல் பந்திலேயே டுவைன் பிரெடோரியஸ் விக்கெட்டை வீழ்த்தி சென்னை அணியினரை பயமுறுத்தினார், உனத்கட். ஆனால், இதற்கு அடுத்து வந்த பிராவோ ஒரு ரன்னை எடுக்க, பேட்டிங் முனைக்கு தோனி அவர்கள் வந்தார். இதன் பிறகு நிகழ்ந்த அத்தனையும் மாஸ் தான்!
நான்கு பந்துகளுக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தோனி சிக்ஸர், பவுண்டரி என அடுத்தடுத்து விளாசினார். ஒரு பந்துக்கு நான்கு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், உனத்கட் வீசிய பந்தை பவுண்டரிக்கு அனுப்பி சென்னை அணியை வெற்றிப் பெற வைத்தார், எம்.எஸ்.தோனி.
எம்.எஸ்.தோனியின் இந்த ஆட்டமானது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்தில் ஆழ்த்தியது என்று கூறினால் அது மிகையாகாது. மேலும் இந்த ஆட்டத்தின் மூலம் மீண்டும் தான் யாரென்று நிரூபித்துள்ளார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது தொடர் தோல்விகளை சந்தித்து, இந்த ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் கூட வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; சேட்டை புடிச்ச பையன் சார், இந்த விஜய்; பீஸ்ட் மற்றும் தளபதி 66 அப்டேட்!