மேற்கு தொடர்ச்சி மலைகளில் கடந்த சில வாரங்களாக ஆங்காங்கே கடும் காட்டுத் தீ பரவி வருகிறது. இந்நிலையில் நேற்றில் இருந்து கடும் தீவிரம் காட்டி வருகிறது தேனி மாவட்டம் பெரியகுளத்தில், கும்பக்கரை அருகே உள்ள புலிக்கூடு வனப்பகுதியில் சிறிதும் குறையாமல் பற்றி எரியத் தொடங்கி உள்ளது. மேலும் அங்குள்ள வனப்பகுதியில் இருந்த அரியவகை மூலிகை செடிகள், மரங்கள் என அனைத்தும் காட்டுத் தீயின் பிடியில் சிக்கி கருகி வருகின்றன.
மேலும் புலிக்கூடு வனப்பகுதியில் சுமார் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பகுதிகள் கருகி சாம்பலாகின. இதே போல் மதுரை-ஆண்டிப்பட்டி சாலையில் உள்ள நாழி வனப்பகுதியிலும் கடும் காட்டுத் தீ பரவி வருகிறது. இங்கும் அரிய வகை மூலிகை மரங்களும் செடிகளும் எரிந்து கருகின. தீவிர வெப்பம் மற்றும் காற்றின் வேகம் காரணமாக தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்கின்றனர் வனத்துறையினர்.
எதிர்காலத்தில் காட்டுத் தீ பரவுவதைத் தடுக்க தீ தடுப்பான் கோடுகளை அமைக்க வேண்டும் என்று அந்த வனப்பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். மலையை ஒட்டிய கிராமப் புறங்களில் தீ பரவுவதைத் தடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தனர்.
ஏற்கனவே திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப் பகுதியில் காட்டுத் தீ பற்றி பல ஏக்கர் கணக்கான நிலங்கள் சேதமாகின. இந்நிலையில் வருவது கோடைக்காலம் என்பதால் அதீத வெப்பம் மற்றும் காற்றின் வேகத்தின் காரணமாக தீ பரவும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் வருடா வருடம் உணவு தண்ணீர் இன்றி வன விலங்குகளும் பறவைகளும் காட்டை விட்டு கிராமத்தை நோக்கி வரும் நிலையில் காட்டுத் தீ பற்றுவதால் விலங்குகளின் வாழ்வு நிலை கேள்விக் குறியாகி உள்ளது. இதனால் உணவுச் சங்கிலியும் மாறுபட வாய்ப்புகள் உள்ளது.
இது மட்டும்மல்ல காட்டுத் தீயால் வரும் கரும் புகையும் சுற்றுச் சூழலை பாதிக்கின்றன. காட்டுத் தீ இயற்கையாகவும் செயற்கையாகவும் வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் என்ன நடவடிக்கைகள் எடுக்கப் போகின்றன என்பது தான் கேள்வி?