இந்தியாவின் பிற திரையுலகங்களை விடவும் தமிழத் திரையுலகம் நகைச்சுவை நட்சத்திரங்களை எப்போதும் கொண்டாடும் மரபை உடையது. எப்படி நாயகர்களாக நடிக்கும் நடிகர்கள் நினைவில் இருக்கிறார்களோ, அதுப்போலவேதான் நகைச்சுவை நடிகர்களும் நினைவில் இருக்கிறார்கள். அந்த வகையில் நாகேஷ், செந்தில், கவுண்டமனி, வடிவேலு, விவேக் போன்றோர் வரிசையில் இடம் பிடித்தவர்தான் சந்தானம்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபாவின் மூலம் தமிழகத்தில் பலரையும் கவர்ந்த சந்தானம் பின்னாளில் நடிகர் சிம்புவின் மன்மதன் திரைப்படத்தின் மூலம் அதிகாரப்பூர்வ முதல் என்ட்ரியை வெள்ளித்திரைக்கு தந்தார்.
அதன்பின்பு படிப்படியாக சந்தானம் வெள்ளித்திரையில் ஜொலிக்க ஆரம்பித்தார். என்னதான் சின்னத்திரையில் ஜொலித்தாலும், வெள்ளித்திரையில் சந்தானம் முழுமையாக ஜொலிக்க ஆறு வருடங்களுக்கு மேலானது. சந்தானத்தின் ஜொலிப்புக்கு பின்னால் பட்டைத்தீட்டப்பட்ட அவரின் அளப்பறிய உழைப்பு இருக்கிறது.
சந்தானத்தின் டைமிங் காமெடிகளும், உடனுக்குடன் கூறப்படும் கவுண்டர்களும் சந்தானத்தை மற்ற கலைஞர்களிடம் இருந்து வேறுபடுத்தியது. சந்தானம் மேற்சொன்னவற்றை செய்த போதெல்லாம் திரையரங்குகளில் சிரிப்பு சத்தங்கள் தாறுமாறாய் வெடிக்கிறது. தற்போதைய காமெடிகள் பலவும் திரையரங்குகளில் சிரிப்பை வரவழைத்து விடுகின்றன ஆனால் சற்று காலங்கள் தனிந்து தொலைக்காட்சிகளிலேயோ,கைப்பேசிகளிலேயோ பார்க்கும் போது இதற்காகவா அன்று சிரித்தோம் என்ற மன நிலையை தந்துவிடுகின்றன. ஆனால் சந்தானத்தின் பல காமெடிகள் இன்றளவும் தாறுமாறாய் வெடிக்கும் சிரிப்பு சத்தங்களையே தருகின்றன.
சந்தானத்தின் கவுண்டர்கள் பலரது வாழ்வியலில் ஒன்றாகிவிட்டது என்றே கூறலாம். ‘செம்ம கலாய்..செம்ம கலாய்’, ‘ஊருக்குள்ள நாலஞ்சு ஃப்ரண்டு வச்சிருக்கவன்லாம்..’, ‘அடை தேனடை’, ‘நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா’ என நம் தினசரி வாழ்வியலில் உபயோகிக்கும் பல வசனங்கள் சந்தானத்தின் கவுண்டர்களாகவே இருக்கிறது. அதுதான் சந்தானத்தின் வெற்றி!
`வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’, `இனிமே இப்படித்தான்’, `தில்லுக்கு துட்டு’, `சர்வர் சுந்தரம்’, `தில்லுக்கு துட்டு 2’, `ஏ1’, `பாரிஸ் ஜெயராஜ்’ போன்ற திரைப்படங்களில் கதாநாயகராக நடித்தும் மக்களை கவர்ந்தும் வருகிறார், சந்தானம்!
நகைச்சுவை நடிகராக மக்களை கவர்ந்த அளவுக்கு கதாநாயகனாக சந்தானம் மக்களை கவரவில்லை என்பது உண்மை என்றாலும், விரைவில் சந்தானம் கதாநாயகனாகவும் மக்களை கவர்வார் என்பதே அவரின் ரசிகர்களின் ஆசையும், நம்பிக்கையும்.
விரைவில் சந்தானம் கதாநாயகனாக அதீத மக்களை கவரவும், அதிக வெற்றிகளை குவிக்கவும் சந்தானத்திற்கு இப்பிறந்த நாளில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது, தினவாசல் குழு!