6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளின் பாடத்திட்டத்தில் பகவத் கீதையை இணைக்கக் கோரி உத்தரவிட்டுள்ளது குஜராத் அரசு.
குஜராத் மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி நடத்தி வருகிறது. அம்மாநில முதல்வராக புபேந்திரபாய் படேல் இருக்கிறார். நேற்று வெளியான குஜராத் மாநில அரசின் சுற்றறிக்கையில் இந்தியாவின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் பழங்கால வரலாறு ஆகியவற்றை பறைசாற்றும் விதமாக இருக்கும் பகவத் கீதை நூலை பள்ளிப் பாடத்திட்டங்களில் சேர்க்க இருப்பதாக தெரிவிக்கப் பட்டிருந்தது. இதனை காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் ஆதரித்துள்ளனர்.
இதுகுறித்து பேசியுள்ள அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ஜீத்து வாகனி இந்திய மக்களின் பெருமை,கலாச்சாரம் மற்றும் அறிவாற்றல் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், மாணவ மாணவிகளின் மத்தியில் புனிதமான கருத்துகள் விதைக்கப்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். மேலும் பகவத் கீதையும் கருத்துக்களும் கோட்பாடுகளும் அனைத்து மதத்தினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவை எனவும் தெரிவித்தார்
6ம் வகுப்பில் இருந்தே பாடப்புத்தகங்களில் பகவத் கீதையின் பல பகுதிகள் இடம் பெரும் என்றும், இதனைக் கற்றுக்கொள்வதால் மாணவர்களிடையே நல்ல பழக்க வழக்கங்கள் இடம் பெரும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில் பகவத் கீதை தொடர்பான கருத்துக்கள் பின்பு மந்திரங்கள், கட்டுரைகள் கற்பிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்படுத்துவதற்காக அவர்களுக்கு தேர்வுகள், போட்டிகள் மற்றும் வினாடி வினா போன்றவை நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அனைவருக்கும் பகவத் கீதை புத்தகங்கள் வழங்கப்பட்டு, 9 முதல் 12 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆடியோ மற்றும் வீடியோக்களாக பாடம் எடுக்கப்பட்டு சிறப்பான முறையில் பகவத் கீதை கற்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார். இந்த முடிவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர், முதலில் பாஜகவினர் தான் பகவத் கீதையை ஒழுங்காக படிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.