தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல், பிரபலமான சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக உள்ளது. இது, இம்மாவட்டத்தின் முக்கிய அடையாளமாகவும் திகழ்கிறது. ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி, அதன் சிறப்பை உணர்த்தும் வகையில், தென்னிந்தியாவின் நயாகரா நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படுகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து மகிழ்ச்சியோடு பொழுதைக் கழிக்கின்றனர்.
மீன் வியாபாரிகள், பரிசல் ஓட்டுபவர்கள் மற்றும் எண்ணெய் மசாஜ் உட்பட ஏறக்குறைய 1000 குடும்பங்கள், இந்த சுற்றுலாத் தளத்தையே தங்கள் வாழ்வாதாரமாய் நம்பியுள்ளனர். மேலும், ஒகேனக்கல் சுற்றுலாத் தளம், தருமபுரி மாவட்டத்திற்கு குறிப்பிடத்தக்க வருவாயை பெற்றுத் தருகிறது. ஒகேனக்கல் சுற்றுலாத் தளத்தை மேம்படுத்தி, உயர்த்த வேண்டும் என நீண்ட நாட்களாகவே அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை நேற்று தமிழக சட்டசபையில் நடைபெற்றது. கேள்வி நேரத்தின் போது பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்த பென்னாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் சுற்றுலாத் தளத்தை மேம்படுத்தும் விதமான கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
வரலாற்றுச் சிறப்பு மிகுந்த ஒகேனக்கல் சுற்றுலாத் தளத்தைக் கண்டுகளிக்க, அண்டை மாநிலங்கள் மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து, சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். இந்த சுற்றுலாத் தளத்தை உலகத் தரத்திற்கு இணையாக மேம்படுத்த வேண்டும். மேலும், இங்கு காவிரிக் கோட்டம், காவிரி அருங்காட்சியகத்தை உருவாக்க வேண்டும். ஒகேனக்கல்லில் காவிரித் தாய் சிலை அமைத்து, அதனைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார் ஜி.கே. மணி.
ஜி.கே. மணியின் கோரிக்கைக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பதிலளிக்கையில், தமிழகத்தில் மொத்தம் உள்ள 300 சுற்றுலாத் தலங்களில் ஒகேனக்கல் சுற்றுலாவும் மிக முக்கியமானது. நிதி நிலைமையைப் பொறுத்து, முதல்வருடன் கலந்தாலோசித்து, வரும் ஆண்டில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஒகேனக்கல் சுற்றுலாத் தளத்தை, உலகத் தரம் வாய்ந்த அளவிற்கு மேம்படுத்தி விட்டால், பிறகு சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.
பள்ளிகளுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை; ஒடிசா அரசு செய்த காரியம் என்ன?