செல்வராகவன் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர் என்பதில் பலருக்கு மாற்று கருத்து இருக்காது. கதைகளிலும், அதை படமாக்கும் விதத்திலும் மற்ற இயக்குனர்களோடு மிகவும் வேறுபட்டு காணப்படுபவர்தான், செல்வராகவன். இக்கூற்றை அவர் திரைப்படங்களைப் பார்த்த அனைவருமே ஒப்புக்கொள்வர்.
இயக்குனராக கோலுச்சிய செல்வராகவன் தற்போது நடிப்பில் ஈடுபட்டு வருவது நம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் பலரும் கவனிக்காத செல்வராகவனின் பரிணாமமாக இருப்பது, பாடலாசிரியர் பரிணாமம்தான்.
ஆம்! துள்ளுவதே இளமை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை போன்ற திரைப்படங்களில் செல்வராகவன் பாடலாசிரியராக தன் மற்றொரு பரிணாமத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் இந்த பாதை, ஓ ஈசா என் ஈசா, மாலை நேரம் போன்ற பாடல்களை எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் ஆண்ட்ரியா அவர்கள் மாலை நேரம் என்ற பாடலைப் பாட நமக்குள் தோன்றும் உணர்வு வலியுடன் சுகம் என்பதைப் போல இருக்கும்.
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் பாடல் இடம்பெறாமல் போனாலும், பலரின் மனதிலும் இடம்பெற்றது மாலை நேரம் எனும் பாடல். காதலை அடிப்படையாக கொண்ட இப்பாடலில் முறிவையும், முறிவின் வாதையையும், ஏக்கத்தினையும் இப்பாடலில் வரிகளாக செல்வராகவன் விதைத்திருக்கும் விதம் அழகியல்.
‘மாலை நேரம், மழைத்தூரும் காலம், என் ஜன்னல் ஓரம் நிற்க்கிறேன்;நீயும் நானும், ஒரு போர்வைக்குள்ளே, சிறு மேகம் போலே மிதக்கிறேன்’ என ஆண்ட்ரியா மென்மையாகப் பாட ஆரம்பிக்கும் போதே நாம் பாடலின் உள் நுழைய ஆரம்பித்திருப்போம்.
மனதின் குமுறல்
வேகமாய் நகர்ந்துக் கொண்டிருக்கும் காலத்தில், பிரிவினூடே இருக்கும் நினைவுகளோடு வாழ்வின் பயணங்கள் மாறுவதையும், இவ்வளவுக்கு பிறகும் துணை என்ற ஒன்று தேவையா என்ற மனதின் குமுறலை இப்பாடலில் செல்வராகவன் கீழ்காணும் படி கூறியிருப்பார்.
ஓடும் காலங்கள்
உடன் ஓடும் நினைவுகள்
வழிமாறும் பயணங்கள்
தொடர்கிறதே..
இதுதான் வாழ்க்கையா
ஒரு துணைதான் தேவையா
மனம் ஏனோ என்னையே
கேட்கிறதே..
முறிவும் வலியும்
ஓர் காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்தது அன்பே
இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம் அன்பே
இதம் தருமே
காதல் ஒன்று இருந்துள்ளதை கூறி, அதற்கு அடுத்த வாக்கியத்திலேயே அந்த காதல் முறிந்ததையும் கூறுகிறார். முறிந்தது சோகம்தான் என்றாலும் அதிலும் ஒரு சுகம் இருப்பதையும், நினைவுகளைப் பரவசம் என்றும் செல்வராகவன் மேற்சொன்ன சரணத்தில் கூற, மற்றொரு சரணத்தில் முறிவின் இன்னலை தெரிவித்து இழந்தது காதலை மட்டுமல்ல, தன்னையும்தான் என கூறியிருப்பார்.
ஏக்கங்கள்
எல்லாமுமாக இருந்த காதல் திடீரென இல்லாமல் போக, அவற்றைச் சார்ந்த நினைவுகள் மட்டும் மனதிற்குள் உழன்றுக் கொண்டிருக்க, மீண்டும் அக்காதல் கைக்கூடினால் என்ன? என்ற ஏக்கம் எழுவது இயல்புதானே! அந்த இயல்பை செல்வராகவன் கீழ்காணும் வரிகளில் விளக்கியிருப்பார்.
ஒரு முறை வாசலில்
நீயாய் வந்தால் என்ன?
நான் கேட்கவே துடித்திடும்
வார்த்தை சொன்னால் என்ன?
இரு மனம் சேர்கையில் பிழைகள்
பொறுத்துக்கொண்டால் என்ன?
இரு திசைப்பறவைகள் இணைந்தே
விண்ணில் சென்றால் என்ன?
இப்படியாக வரிகளை வடிவமைத்து இயக்கத்தில் மட்டுமல்ல பாடல் எழுதுவதிலும் நான் கைத்தேர்ந்தவன்தான் என்று இப்பாடலின் மூலம் சொல்லிச்செல்கிறார், செல்வராகவன்!
இப்பாடலை கேட்க; https://www.youtube.com/watch?v=wrBeRs1vM4I
இதையும் படிங்க; நமக்குத் தெரியாத செல்வராகவனின் மற்றொரு பரிணாமம் குறித்த சிறப்பு பார்வை!