சென்னை கூவம் ஆற்றில் 3-வது முறையாக விழுந்த நபரை தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர்.
சென்னை, சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் நேற்று மதியம் நபர் ஒருவர் விழுந்துவிட்டதாக தீயணைப்பு துறைக்கு தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவல்லிக்கேணி தீயணைப்பு துறையினர், கூவம் ஆற்றில் ரப்பர் படகை இறக்கி இளைஞரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த நபர், தீயணைப்பு துறையினர் ரப்பர் படகு நெருங்கும்போது நீச்சல் அடித்து ஒவ்வொரு கரையாக மாறி திரிந்தார். இதனால், சந்தேகம் அடைந்த தீயணைப்பு துறையினர் கூவம் ஆற்றில் இறங்கி அந்த நபரை பிடிக்க முயன்றனர்.
இதையடுத்து, 3 மணி நேர கடுமையான போராட்டத்திற்கு பின் கயிறு மூலம் அந்த நபரை மீட்டனர். தீயணைப்பு துறையினர் அவரை கரைப்பகுதிக்கு அழைத்து வந்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காவல்துறை நடத்திய விசாரணையில், அந்த நபரின் பெயர் வேலு என்பதும் அவருக்கு வயது 35 என்றும், சற்று மனநலம் பாதிக்கப்பட்ட அவர் சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, காவல்துறையினர் வேலுவை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வேலு ஏற்கனவே இரண்டு முறை கூவம் ஆற்றில் விழுந்ததும், அவரை காப்பாற்றிய காவல்துறையினர் அவரை எச்சரித்து அனுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
‘தற்போது வெளியானதுதான் காந்தாராவின் இரண்டாம் பாகம்’ – காந்தாரா இயக்குநர் பேச்சு!