புதுச்சேரியில் விலை உயர்ந்த பெர்ஷியன் ரக பூனையை திருடிவிட்டு அந்த காட்சிகள் வீடியோவாக பரவியதை அடுத்து மீண்டும் கடை வாசலில் பூனையை விட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முத்தியால்பேட்டை மணிகூண்டு அருகே ஜெயக்குமார் என்பவர் பெட் ஷாப் வைத்துள்ளார். இவரது கடையில் புறா, வண்ண மீன்கள், நாய்கள், பல ரக பூனைகள் உள்ளிட்டவைகளை வளர்த்து வருகிறார். கடந்த 18 ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு கடைக்கு வந்த 3 பேர் அங்கு வளர்க்கப்படும் புறா, மீன்கள் குறித்து விவரங்களை கேட்டனர். அப்போது அங்கு புசுபுசுவென பூனை ஒன்று அங்கும் இங்கும் சென்றுக் கொண்டிருந்தது.
அதை பார்த்த அவர்கள் இந்த பூனை என்ன விலை என கேட்டுள்ளனர். அதற்கு ஜெயக்குமார், அதன் விலையை கூறினாராம். விலையை கேட்டு தலைச்சுற்றி போன அந்த மூவரும் ஜாலியாக பேசிக் கொண்டே அந்த கடைக்காரரிடம் விசிட்டிங் கார்டு கேட்டுள்ளனர்.
ஜெயக்குமார் விசிட்டிங் கார்டை எடுக்கும் நேரத்தில் மூன்று பேரில் இருவர் பைக்கை ஸ்டார்ட் செய்து உட்கார்ந்தனர். கடையில் பூனையுடன் இருந்த மற்றொரு நபர், பூனையை தூக்கிக் கொண்டு அந்த பைக்கில் ஏறி தப்பி சென்றுவிட்டார். இதையடுத்து ஜெயக்குமார் போலீஸில் புகார் அளித்தார்.
மேலும், தனது கடையில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளையும் இணையதளத்தில் பகிர்ந்தார். பூனையை மீட்டு உரிமையாளரிடம் கொடுத்து விடுங்கள் என நெட்டிசன்களும் கோரிக்கை விடுத்தனர். இந்த காட்சிகள் வைரலானதால் அச்சமடைந்த பூனையை திருடிச் சென்ற நபர்கள் மீண்டும் அந்த கடையின் வாசலில் கொண்டு வந்துவிட்டனர்.