ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா உயிரிழந்ததை அடுத்து, அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். அதில் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 43, 923 வாக்குகளை பெற்றார்.
இதைத்தொடர்ந்து, மார்ச் 10 ஆம் தேதி தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு அலுவலகத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.
இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக, அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவருக்கு லேசான கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தனியார் மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. XBB வகை கொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல் அவர் அவதி அடைந்ததாகவும், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை சமநிலைப்படுத்த செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இளங்கோவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
யூடியூப்பில் சாதனை செய்யும் பொன்னியின் செல்வன்..