கொரோனாவின் வீரியத்தொற்று குறைந்ததாக தென்பட்டாலும், கொரோனா முற்றிலுமாய் ஓயவில்லை என்பதையும் நாம் மனதில் வைத்தாக வேண்டியுள்ளது. நம்மில் பலர் கொரோனா குறைந்து விட்டது என்றும், கொரோனா முற்றிலுமாய் அழிந்து விட்டதென்றும் எண்ணி வருகையில் உலகெங்கிலும் கொரோனாவின் தாக்கம் இருப்பதாய் செய்திகள் தொடர்ந்து வந்து நம்மின் கொரோனா பற்றிய நமது எண்ணத்தை பொய் என்றாக்கிவிடுகிறது.
அப்படியாகத்தான், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதும் கொரோனாவின் இருப்பை உலக மக்களுக்கு மீண்டும் அறிய செய்திருக்கிறது.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதை குறித்து எலிசபெத் ராணியின் அதிகாரப்பூர்வ இல்லமான ஃபக்கிங்காம் அரண்மனை நிர்வாகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், 95 வயதான ராணிக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவும், அவருக்கு உயரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இருதவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் ராணிக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மிக லேசான அறிகுறிகள் இருப்பதாலும், தமது கடமைகளில் எளிய பணிகளை ராணி தொடர்ந்து மேற்கொள்வார் என்றும் அச்செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராணியின் மூத்த மகனும், பட்டத்து இளவரசருமான சார்லஸூக்கு கொரோனா தொற்று உள்ள நிலையில், அவரை ராணி சந்தித்தார் என்றும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இளவரசர் சார்லஸ் மூன்று முறை தடுப்பூசி செலுத்தியுள்ளதும், இரண்டாவது முறையாக கொரோனா தொற்றால் பாதிப்படைந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.