உக்ரைனுக்கும் இரஷ்யாவுக்கும் இடையே நடைபெற்று கொண்டிருக்கும் போர் சற்றும் தன் தீவிரத்தன்மையை இழக்காது ஏழாம் நாளை தொட்டுள்ளது. உக்ரைனின் முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ், செர்னிகிவ் போன்றவை இரஷ்யாவின் இராணுவப் படைகளால் துவம்சம் ஆக்கப்பட்டு வருகிறது. இவையல்லாது பிற பகுதிகளும் இரஷ்யாவின் இராணுவப் படைகளால் தாக்கப்பட்டு வருகிறது.
தாக்குதல் ஒரு பக்கமாய் நிகழ்தல் குறைந்து, உக்ரைன் இராணுவமும் தக்க பதிலடிகள் கொடுத்து வருகின்றன. உலக நாடுகள் துளியும் எதிர்ப்பார்க்காத அளவிற்கு உக்ரைன் இராணுவத்தின் பதில் தாக்குதல்கள் இருந்து வருகிறது. உக்ரைன் தரப்பில் இருந்து, ஆறாயிரத்திற்கும் அதிகமான இரஷ்ய இராணுவ வீரர்கள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 750 க்கும் அதிகமான உக்ரைன் பொதுமக்களை இரஷ்யா இராணுவம் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உக்ரைன் மீது வான்வழி உள்ளிட்ட முறைகளில் தாக்குதல்களை இரஷ்யா தீவிரப்படுத்தி வருகிறது. வான்வழித் தாக்குதலை உக்ரைன் எப்படி எதிர்கொள்ளப்போகிறதென்ற கேள்வி உலக நாடுகள் மத்தியில் இருக்க, அச்சமூட்டும் மற்றோரு செயலை இரஷ்யா செய்து வருகிறது.
ஆம்! இரஷ்யா கடல் வழி தாக்குதலை துரிதப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் எல்லையை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில் இரஷ்ய போர்க் கப்பல்கள் முகாமிட்டுள்ளதாகவும், பியோட்டர் மார்க்னோவ், ப்ரோஜெக்ட்-1171, ப்ரோஜெக்ட்-775 ஆகிய போர் கப்பல்கள் அம்முகாமில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவித்து வருகின்றன. மேலும், இந்த போர்க்கப்பல்களில், கப்பலுக்கு தலா 500 வீரர்களும், நான்கு தாக்குதல் வானூர்திகளும் உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.