சத்தீஸ்கர் மாநிலத்தில் எட்டு வயது சிறுவன் ஒருவன் தன்னை கடித்த நாகப்பாம்பை திரும்பி கடித்ததில் நாகப்பாம்பு இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜாஷ்பூர் மலைவாழ் பகுதியில் பாஹடி கோர்வா என்ற பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் அதிக வகையிலான பாம்புகள் காணப்படுவதால், இப்பகுதியானது “நாகலோகம்” என்றழைக்கப்படுகிறது. இப்பகுதியில், மக்களை பாம்புகள் கடிப்பதும், உயிரிழப்பு நிகழ்வதும் வழக்கமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த கிராமத்தில் தீபக் என்ற 8 வயது சிறுவனை கடந்த திங்கள்கிழமை நாகப்பாம்பு ஒன்று கடித்துள்ளது. அந்த சிறுவன் தன் வீட்டுத்தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போது இந்த நிகழ்வானது அரங்கேறியுள்ளது. தன்னை பாம்பு கடித்ததை உணர்ந்த சிறுவன் உடனே அந்த நாகப்பாம்பை பிடித்து பல முறை கடித்துள்ளான். சிறுவன் கடித்ததில் அந்த நாகப்பாம்பு இறந்துவிட்டது.
இதைத்தொடர்ந்து, அந்த சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. தற்போது, அச்சிறுவன் நலமாக உள்ளான். பாம்பை சிறுவன் கடித்து பாம்பு இறந்த சம்பவம் தற்போது சமூகவலைதளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: ‘இவர்தான் என் வருங்கால கணவர்’ – திருமணம் குறித்து அறிவித்த ஹன்சிகா