இன்று மகளிர் தினம்
உலகம் முழுவதும் இன்று மகளிர் தினம் கோலாகலமாய் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் தங்களின் மகளிர் தின வாழ்த்தை பதிவு செய்து வருகின்றனர். அப்படியாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், டாக்டர் இராமதாஸ் அவர்கள், அனைத்து மகளிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் உளமார்ந்த மகளிர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
பூவுலகை காக்கும் பெண்கள்
‘ஒரு காலத்தில் உரிமைகளுக்காக போராட வேண்டிய நிலையில் இருந்த பெண்களால் தான், இன்றைய நிலையில் உலகைக் காக்க முடியும் என்று ஐ.நா. அமைப்பு நம்புகிறது. அதனால் தான் நடப்பாண்டின் மகளிர் நாளுக்கான கருப்பொருளாக,‘‘ நீடித்த நாளைக்காக இன்று பாலின சமத்துவம்’’ என்ற தத்துவம் அறிவிக்கப்பட்டுள்ளது’ என்றார்.
பூவுலகுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளை கட்டுப்படுத்துவதற்கான இயக்கங்களை உலகில் இன்றைய நிலையில் பெண்களும், சிறுமிகளும் தலைமையேற்று நடத்துகின்றனர் என்றும் டாக்டர் இராமதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
டாக்டர் இராமதாஸ் உறுதிமொழி
‘உலகை ஆக்கும் சக்தியாகவும், காக்கும் சக்தியாகவும் திகழ்பவர்கள் பெண்கள் என்பது இதன்மூலம் தெளிவாகிறது. பெண்கள் எதிலும், எதற்கும், யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதையே இது காட்டுகிறது. பல்வேறு துறைகளில் ஆண்களை விட பெண்கள் அதிக சாதனைகளைப் படைத்துள்ளனர். அத்தகைய சிறப்புமிக்க பெண்களை குறைந்தபட்சம் ஆணுக்கு சமமாக நடத்த முன்வர வேண்டும்; பெண்களுக்கு கண்ணியமான, கவுரவமான வாழ்க்கையையும், பொதுவெளியில் அச்சமின்றி, சுதந்திரமாக நடமாடுவதற்குமான உரிமையை வென்றெடுத்துத் தர வேண்டிய ஒட்டுமொத்த சமூகத்தின் கடமை ஆகும். அந்தக் கடமையை நிறைவேற்ற இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்’ எனவும் டாக்டர் இராமதாஸ் அவர்கள் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.