சென்னையின் அடுத்தகட்ட போக்குவரத்தாக மதுரவாயல் – துறைமுகம் வழியான மேம்பாலங்களை முன்னரே இடிக்கப் போவதாக அறிவித்தது. இந்நிலையில் இதை இடித்துவிட்டு புதிதாக இரண்டு அடுக்கு மேம்பாலம் கட்டும் திட்டத்தை அறிவித்துள்ளது.
சென்னையில் சரக்கு வாகனங்கள் போக்குவரத்தால் சாலை நெரிசல் அதிகம் இருந்து வருகிறது. மேலும் சரக்கு வாகனங்கள் சென்னை துறைமுகத்திற்கு வராமல் ஆந்திர துறைமுகத்திற்கு செல்வதால், அரசின் வருவாய் பாதிக்கப்பட்டு வந்தது. இதனால் 2010 ஆம் ஆண்டு திமுக அரசு மதுரவாயல் மேம்பாலத் திட்டத்தினை அறிமுகப்படுத்தியது. 2011 ஆம் ஆண்டு அதிமுக அரசு மாறியதும் கூவம் நதியில் மேம்பாலம் கட்டுவது சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என மேம்பாலத் திட்டத்தை அப்படியே கைவிட்டது.
மேலும் அந்த மேம்பாலங்கள் சுவரொட்டிகள் விளம்பரங்கள் செய்யவே அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான நிதின் கட்கரி இரட்டை மேம்பாலத் திட்டத்தை அறிவித்தார்.
இது குறித்து பேசிய தேசிய நெடுஞ்சாலைத் துறை மண்டல அதிகாரி எஸ்.பி சோமசேகர், ரூ.5,975 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த மேம்பாலம் மதுரவாயலில் இருந்து எண்ணூர் துறைமுகம் வரை சுமார் 20 கி.மீ வரை செல்லும் மேலும் இதில் கூவம் ஆற்றை ஒட்டி 9 கி.மீ வரை செல்லும் என தெரிவித்தார்.
ஏற்கனவே கட்டப்பட்ட பழைய மேம்பாலத் தூண்கள் இடிக்கப்பட்டு புதிதாக கட்டமைக்கப்படும் என்றும், பழைய மேம்பாலத் தூண்களின் மேல் மேம்பாலம் கட்டுவதால் ஆபத்து ஏற்படலாம் என்பதால் அந்த தூண்கள் இடிக்கப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.
இதில் 125 மேம்பாலத் தூண்களில் 110 தூண்கள் இடிக்கப்படாது என்றும் புதிய தூண்கள் அமைப்பதற்காக சுற்றுச் சூழல் துறை மற்றும் கடலோர ஒழுங்கு முறை துறையிடமும் அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவித்தார். இதற்கான திட்டப் பணிகளின் ஒப்புதலை தமிழக அரசிடம் பெற்று தேசிய நெடுஞ்சாலைத் துறை வேகமாக செயல்படுத்தி வருகிறது.