உலக நாடுகள் ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு பண்பாடு, ஒவ்வொரு கலாச்சாரம் என பிரத்யேகமாய் பண்புகள் உள்ளன. இப்படியான பல பண்புகளும் ஒன்றினைந்துததுதான், உலக நாடுகள். பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்வதே ஒற்றுமையின் அடிப்படை இயல்பு.
அப்படியாகத்தான் உலகம் முழுவதும் இன்று தாய்மொழி நாள் கொண்டாடப்படுகிறது. வங்கமொழி பேசும் மக்கள் மீது உருது மொழி திணிக்கப்பட்டதற்கு எதிராகப் போராடிய ஐந்து மாணவர்கள் 1952 ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டதை குறிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை தாய்மொழி நாளை கடைபிடிக்கிறது.
இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் இராமதாஸ் அவர்கள் தாய்மொழி நாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார். மேலும், தாய்மொழியைக் காக்க விரும்புவோர் செய்ய வேண்டியவற்றை சுருங்க பதிவு செய்திருக்கிறார்.
அதன்படி, தாய்மொழியைக் காக்க விரும்புவோர் செய்ய வேண்டிய முதல் பணி, தாய்மொழி வழிக்கல்வியை காப்பதுதான் என்று தெரிவித்தார். மொழிப்போர் நடத்திய தமிழ்நாட்டில் தாய்மொழிக் கல்விக்கு முன்னுரிமை இல்லை என்பது தலைகுனிய வேண்டியதாகும். தமிழ்க் குழந்தைகளின் அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானதாகும் என்றும் அப்பதிவில் அவர் தெரிவித்திருக்கிறார்.
‘தமிழ்நாட்டில் தமிழ் ஒரு கட்டாயப் பாடமாகக் கூட இல்லை என்கிற நிலையே இன்னும் நீடிப்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. இந்த நிலையை மாற்றி, எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்கிற நிலையை உருவாக்க பன்னாட்டு தாய்மொழி நாளில் உறுதி ஏற்போம்’ எனவும் டாக்டர் இராமதாஸ் அவர்கள் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.