சில வாரங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் உள்ள குடிப்பகங்களை ( பார்களை ) ஆறு மாதத்திற்குள் மூடக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக அரசின் இச்செயல் பலருக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கிறது.
மக்கள் நலனுக்கு எதிரானது
பலரும் இந்த அதிர்ச்சியில் இருக்க, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் இராமதாஸ் அவர்கள், தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளின் குடிப்பகங்களை 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி அளித்தத் தீர்ப்பை எதிர்த்து 2 நீதிபதிகள் அமர்வில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருப்பது மக்கள் நலனுக்கு எதிரானது என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி குடிப்பக உரிமம் நிறைவடைந்துள்ள மற்றும் உரிமம் இல்லாத 3719 குடிப்பகங்கள் உடனடியாக மூடப்பட வேண்டும் என்றும் மற்றவை 6 மாதங்களில் மூடப்பட வேண்டும் என்றும் இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு வேண்டாம் என பாமக கோரிய போதிலும் தமிழக அரசு செய்திருக்கிறது எனவும் இராமதாஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
இது நல்லதல்ல
“ஒருபுறம் ரூ.4500 கோடிக்கு மதுவிலைகள் உயர்வு, மறுபுறம் புதிய மதுக்கடைகள் திறப்பு, இன்னொருபுறம் குடிப்பகங்களை மூடுவதற்கு எதிரான மேல்முறையீடு போன்ற அரசின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது மதுவணிகத்தை நம்பித் தான் இந்த அரசு செயல்படுகிறதோ? என்ற எண்ணம் ஏற்படுகிறது” எனவும் இது நல்லதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இராமதாஸ் வலியுறுத்துபவை
- குடிப்பகங்களை மூடும் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.
- வருவாய்க்கான மாற்றுத் திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும்.
- மதுக்கடைகளை படிப்படியாக மூடி தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும்.