படித்த, தொழிற்பயிற்சி பெற்ற தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் வேலை கிடைத்ததாக களத்திலிருந்து எந்த செய்தியும் வருவதில்லை. இதற்குக் காரணம் தமிழகத்தில் அமைக்கப்படும் தொழிற்சாலைகளின் வேலைவாய்ப்புகள் ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்களுக்கு தாரை வார்க்கப்படுவது தான். இதற்கு முடிவு கட்டும் வகையில் தமிழகத்தில் உள்ள தனியார் தொழில் நிறுவனங்களில் 80% வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பா.ம.க. வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் தொடர்ந்து பறிபோவதாக குற்றம் சாட்டிய பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் இராமதாஸ் அவர்கள், குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் 80% பணிகளும், ராஜஸ்தானில் 75% பணிகளும், மத்திய பிரதேசத்தில் 70% பணிகளும் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தானில் பொதுத்துறை – தனியார்துறை கூட்டு முயற்சி திட்டங்கள், சிறிய நிறுவனங்கள் ஆகியவற்றின் வேலைவாய்ப்புகளிலும் உள்ளூர் ஒதுக்கீடு உள்ளது ஆனால் தமிழகத்தில் இப்படியான ஒரு சட்டம் இல்லை என்பதை தெரிவித்து இருக்கிறார்.
மேலும், சமீபத்தில் ஹரியானா மாநில தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் 75 விழுக்காட்டை உள்ளூர் மக்களுக்கே வழங்குவதை கட்டாயமாக்கி அம்மாநில அரசு இயற்றிய சட்டத்திற்கு ஹரியானா – பஞ்சாப் உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது என்பதையும் இராமதாஸ் அவர்கள் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
1998 ஆம் ஆண்டில் சென்னை மறைமலைநகரில் போர்டு மகிழுந்து ஆலை தொடங்கப்பட்ட போதே, அதில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று 10,000 பேரைத் திரட்டி எனது தலைமையில் போராடியதை நினைவு கூர்ந்த அன்றைய இராமதாஸ் அவர்கள் நிலைமை இன்றும் மாறாதது பேரவலம் என்றார்.
“இந்த நிலையை மாற்றி, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றால், தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் குறைந்தது 80% வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டு இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
‘‘தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75% வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க, சட்டம் கொண்டு வரப்படும்’’ என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. அதை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் இன்றைய தமிழக அரசுக்கு உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் மாதம் ரூ.40,000 வரை ஊதியம் கொண்ட பணிகளில் 80 விழுக்காட்டை தமிழக இளைஞர்கள் – இளம் பெண்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்கி சட்டம் இயற்ற வேண்டும். மார்ச் மாதத்தில் கூடவிருக்கும் சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரிலேயே இச்சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்” எனவும் டாக்டர் இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.