திராவிட முன்னேற்ற கழகம் சமீப காலமாகவே தொடர்ந்து நெட்டிசன்களின் கேலிக்கைக்கு உள்ளாகி வருகிறது. திமுக வில் நிகழும் உட்கட்சி பூசல், காங்கிரஸ் இடம் கேட்டது, உக்ரைன் மாணவர்களின் வரவேற்பு காணொளியில் குளறுபடி செய்தது என பலவை நெட்டிசன்களுக்கு கிடைக்க அவர்களும் திமுக-வை நன்கு கலாய்த்து வருகின்றனர்.
இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு அவர்களின் மகள் கலப்பு திருமணம் செய்தார். ஆனால் இந்த கலப்பு திருமணத்துக்கு அமைச்சர் சேகர் பாபு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், எங்களுக்கு என் அப்பாவின் மூலம் ஆபத்து வர வாய்ப்பு இருப்பதால் எங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்று சேகர் பாபு அவர்களின் மகள் தன் கணவருடன் கர்நாடக காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இந்நிகழ்வை நெட்டிசன்கள் மட்டுமல்லாது பொது மக்களும் விமர்சித்து வந்தனர். பலர் திமுக தலைமை தலையிட்டு இப்பிரச்சினையை சுமுகமாக முடித்து வைக்குமாறும் அறிவுரை வழங்கினர். இன்னும் பலர் திமுகவின் அமைச்சர்கள் வெளியில் மட்டும்தான் நாங்கள் மத-இனச்சார்பற்றவர்கள் என்று கூறுவதாகவும், உள்ளுக்குள் அவர்களும் மதம், இனம் என அனைத்தையும் பின்பற்றுவதாகவும் தங்களின் கருத்துகளை தெரிவித்தனர்.
இக்கூற்றை உறுதி செய்யும் வண்ணமே மற்றொரு செயலும் அரங்கேறியுள்ளது. ஆம்! அதுவும் அமைச்சர் ஒருவர் செய்ததுதான். நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் சமீபத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக குரு பங்காரு அடிகளார் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். ஆசி பெறும்போது எடுக்கப்பட்ட புகைப்படமொன்று வெளியாகி சர்ச்சையில் சிக்கியதோடு அப்புகைப்படம் இணையத்திலும் வைரலானது.
அப்புகைப்படத்தில் கே.என்.நேரு அவர்கள் தன் அருகில் சோபா இருந்தும் பங்காரு அடிகளார் முன் தரையில் அமர்ந்து இருந்தார். சுய மரியாதை, பெரியாரிய கொள்கைகளை பின்பற்றும் கட்சி என கூறிக்கொண்டு கே.என்.நேரு தரையில் அமர்ந்திருக்கும் காட்சிகள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.