சமீபகாலமாக திமுக உறுப்பினர்கள் பல்வேறு அடாவடிகளில் ஈடுபட்டு மக்களின் பார்வையில் மாட்டிக்கொள்கின்றனர். அந்த வரிசையில் தற்போது மீண்டும் ஒரு திமுக நிர்வாகி ஒரு பிரச்சினையை செய்ய, அவர் தற்போது ஆதாரத்துடன் மக்களிடம் சிக்கிக் கொண்டார்.
அமர்க்களம்
சித்ரா தேவி தாம்பரம் மாநாகராட்சியில் 33 வது வார்டு கவுன்சிலர். சித்ரா தேவி கவுன்சிலராக பொறுப்பேற்றதிலிருந்து சித்ரா தேவியின் கணவனின் தம்பி தினேஷ் அதிக அமர்க்களம் செய்துள்ளார்.
அவர் செய்த செயல்கள் பலவும் சுற்றுப்புரத்தில் உள்ளோரை கடுப்படையச் செய்தாவாறே இருந்துள்ளன. மேலும், தினேஷ் பல்லாவரம் திருநீர் மலை பகுதியில் அதிகம் சுற்றக்கூடிய நபராகவே இருந்து வந்துள்ளார்.
வசூல் வேட்டை
சுற்றல் என்றால் வெறுமனே சுற்றல் அல்ல, அங்குள்ள வணிக வளாகங்களில் உள்ள கடைகளில் மற்றும் சிறு சிறு கடைகளை மிரட்டி பணம் பறித்து வருவதை வேலையாக வைத்திருந்துள்ளார்.
இந்த மாமூல் வசூல் வேட்டையை தினேஷ் தனது நண்பர் சுகுமார் என்பவருடன் சேர்ந்து செய்து வந்துள்ளார். வியாபரிகளும் இவர்கள் ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்கள் என்பதால் புகார்களை அதிக அளவில் அளிக்காமல் இருந்து வந்துள்ளனர்.
இவற்றையும் மீறி, ஒருசில புகார்கள் காவல் நிலையத்தை வந்தடைந்தாலும், காவல்துறை தினேஷ் ஆளுங்கட்சியைச் சார்ந்தவர் என்பதால் பெரிதும் கண்டுக்கொள்ளாமல் இருந்துள்ளனர். இதனால் மிகவும் எளிதாக தினேஷ் தனது நண்பர் சுகுமாருடன் மாமூல் வசூல் வேட்டையை நிகழ்த்தியுள்ளார்.
தினேஷின் நண்பரான சுகுமார் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால் சுகுமாரின் மீது பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் இயல்பாகவே பயமிருந்துள்ளது. எதற்கு வம்பு என்று அவர் மீதும் புகார் அளிக்காமல் மக்கள் ஒதுங்கிச் சென்றுள்ளனர்.
அடித்து நொறுக்கல்
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திருநீர்மலை பகுதியில் உள்ள டீக்கடை , பிரியாணி கடைகளில் இருவரும் வழக்கம்போல் மாமூல் வசூலைத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இம்முறை மாமூல் தர மறுத்துள்ளனர்.
மாமூல் தர மறுத்ததால் தினேஷ் மற்றும் சுகுமார் இருவரும் டீக்கடையினையும் பிரியாணி கடையையும் அடித்து நொறுக்கியுள்ளனர். கடையினை அடித்து நொறுக்கும் காட்சியானது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதையடுத்து கடையின் உரிமையாளர் சிசிடிவி காட்சிகளின் ஆதாரங்களோடு சங்கர் நகரில் அமைந்துள்ள போலீசில் புகார் அளித்திருக்கிறார்.
பதிவாகிய இக்காணொளியானது இணையத்தில் பரவலாக பரவியது. இதனையடுத்து கடையின் உரிமையாளர் அளித்தப் புகாரின்பேரில் திமுக பிரமுகர் தினேஷ், அவருடைய நண்பர் சுகுமார் ஆகியோர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆளுங்கட்சிகள் அவ்வபோது இவ்வாறாக அடாவடி செயல்களில் ஈடுபடுவதுக் குறித்து தலைமையோ, கட்சியோ என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், இதைப்போல மீண்டும் நடக்காமல் இருக்க ஆவணம் செய்யும்படியும் திமுக அரசை மக்கள் கேட்டுக்கொண்டு வருகின்றனர்.