திமுகவினர் தேர்தலுக்காக பணத்தை வாரி வாரி இரைப்பதாக முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விடியா அரசு ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் பணத்தை வாரி இரைப்பதாகவும், வீட்டுக்கு வீடு குக்கர், கொலுசு வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் குறுக்கு வழிகளில் தேர்தலை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்த ஜெயக்குமார், பெண்களுக்கான உரிமை தொகை ஆயிரத்தை திமுக அரசு இதுவரை வழங்கவில்லை எனவும் ஆனால், தேர்தல் வருவதை ஒட்டி அமைச்சர் உதயநிதி இன்னும் ஐந்து மாதத்தில் உரிமை தொகை வழங்கப்படும் என்று சொல்வதாகவும் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து அவர், இதை எப்படி நம்புவது? என்று கேள்வி எழுப்பியதோடு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும், காவல்துறையினர், ராணுவத்தினர், பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
திமுகவினர் தேர்தலுக்காக பணத்தை வாரி வாரி இரைக்கிறார்கள். மக்கள் மத்தியில் இரட்டை இலைக்கு வரவேற்பு உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் திமுகவினர் சர்வாதிகாரி போல, அராஜகத்தை அரங்கேற்றி வருகின்றனர். 150 இடங்களில் பட்டியில் மாடுகளை அடைப்பது போல மக்களை அடைத்து வைத்துள்ளார்கள். பல கோடி ரூபாய்களை வாரி இரைத்துள்ளனர் என ஜெயக்குமார் பரபரப்பு குற்றம் சாட்டினார்.
மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டிய ஜெயக்குமார், கள்ள ஓட்டு போட்டவரை பிடித்துக் கொடுத்ததற்காக தனக்கு கிடைத்த பரிசு சிறை தண்டனை என கூறினார்.
மேலும் இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலை எனவும் ஓ.பன்னீர்செல்வம் களத்திலேயே இல்லை. அவர் பின்னால் இனிமேல் யாரும் இருக்கமாட்டார்கள். அதிமுகவிற்கு ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் இவர்களை தவிர யார் வந்தாலும் அவர்களை அரவணைத்து ஏற்றுக் கொள்வோம் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தீவிரவாத அச்சுறுத்தல்; பரபரப்பில் பாகிஸ்தான்!