தில்லை சிதம்பரம் நடராசர் கோவிலில் விவகாரத்தில் தீட்சிதர்களுக்கு ஆதரவாக நின்று தமிழையும், தமிழ் மக்களையும் ஏமாற்றி வஞ்சிக்கிறது திமுக அரசு. இதுதான் திராவிட மாடலா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
சிதம்பரம் நடராசர் கோவிலில் உள்ள திருச்சிற்றம்பலம் மேடையில் ஏறி நின்று சிவனடியார் ஆறுமுகசாமி அவர்கள் மெய்யியல் வழிபாடு செய்ய முயன்றார். இதற்காக அவரை அக்கோவில் தீட்சிதர்கள் தாக்கியதை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டு பின்பு தடை திருப்பிப் பெறப்பட்டது.
இதனை கடுமையாக எதிர்த்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், சிதம்பரம் நடராசர் கோவிலில் திருச்சிற்றம்பலம் மேடையில் தமிழில் வழிபாடு செய்ய எதிர்ப்பதை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்திற்கு தடை விதித்தது தமிழக அரசு. கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து இந்தத்தடை ரத்து செய்யப்பட்டு இருந்தது.
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! போன்ற பிரச்சாரங்கள் மூலம் ஆட்சியைப் பிடித்துவிட்டு இன்று தமிழில் வழிபாடு செய்வதற்கே ஏதுவற்ற சூழ்நிலையை உருவாக்கிவிட்டு பின் அதை எதிர்த்துபோராடுவதற்கு தடை விதிப்பது கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளார்.
சோழ மன்னர்களால் கட்டப்பட்ட தில்லை நடராஜர் கோவிலை இன்று தில்லை தீட்சிதர்கள் தங்கள் குடும்ப சொத்தைப் போல மாற்றி விட்டனர் எனவும் குற்றம் சாட்டியுள்ளார். சைவ சமயக்குறவர்கள் நால்வரால் பாடப்பட்டு சிறப்பு பெற்ற இத்தலத்தில் தமிழில் மெய்யியல் வழிபாடு செய்தமைக்காக சிவனடியார் ஐயா ஆறுமுகசாமியைத் தாக்கியது மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும் கூறியுள்ளார்.
மேலும், இதேபோல் சில நாட்களுக்குமுன் பெண் ஒருவரைத் தாக்கிய வழக்கில் அவர்களின் மீது வன்கொடுமைச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய்யப்பட்டது. ஆனால், இன்றுவரை அவர்களை கைது செய்யாதது திமுக அரசின் கையாலாகாத தனத்தையே காட்டுகிறது எனவும் கடிந்துள்ளார்.
சமூக நீதி என பேசிக்கொள்ளும் இந்த அரசு இதன் மூலம் மனுநீதியின் பக்கம் நிற்பதாகவேத் தெரிகிறது. தீட்சிதர்களுக்கு மட்டும் சமூக நீதியில் என்ன விதிவிலக்கு எனக் கடுமையாக சாடியுள்ளார்.
பிரதமர் மோடியின் மத வழிபாட்டு நிகழ்வுகளை கோவில்களில் திரையிட்டு ஒளிபரப்ப பாஜகவினருக்கு அனுமதி வழங்கிய இந்த அரசு, திருச்சிற்றம்பலத்தில் தமிழ் உரிமையைக் கேட்டு போராடுவதற்கு எதிராக செயல்படுவது ஆரிய அடிவருடித்தனம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆகையால் இந்த சம்பவத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரிய அவர், தீண்டாமைச்சுவராய் இருக்கும் நந்தன் நுழைந்த தெற்கு வாயிலை திறக்கக்கோரியும் அங்கே நந்தன் பெயரில் மணிமண்டபம் எழுப்பக்கோரியும் கோரிக்கை விடுத்துள்ளார்.