தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ள தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்து வேட்பாளர் அறிவிப்புகள் நிகழ்ந்தது. அதன் பின்னே தற்போது வாக்கு சேகரிப்புகள் தீவிரமாய் நிகழ்ந்து வருகிறது.
பல கட்சிகளும் வாக்கு சேகரிப்பில் பல யுக்திகளை கையாண்டு வருகின்றன. இந்நிலையில் வாக்கு சேகரிப்பின் போது நீட் தேர்வு குறித்து திமுக மற்றும் அஇஅதிமுக கட்சிகள் பேசி வருகின்றன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நீட் தேர்வு குறித்து பலரும் பேசி வருவது விந்தையாக இருப்பதாக மக்கள் கூறி வருகின்றனர். அதிலும் நீட் தேர்வுக்கு தமிழகத்தில் ஒப்புதல் வழங்கியவர்கள் யார், நீட் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போது பெரும்பான்மை வகித்த மக்களவை உறுப்பினர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்று தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து நீட் தேர்வு பற்றிய உரையாடல்கள் நீடிக்க, நீட் தொடர்பாக நேருக்கு நேர் விவாதத்திற்கு தயாரா என்றும் அதிமுகவினரிடம் கேள்வி எழுப்பினார் மு.க.ஸ்டாலின்.
இது தொடர்பாக, முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, நாங்கள் நீட் விவாதத்திற்கு தயார் என்றும், நீட் தேர்வுக்கு எதிராக தங்களின் கட்சியே அதிகமாக குரல் எழுப்பியது என்றும் கூறினார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் அவர்களும் நீட் தொடர்பாக திமுக என்ன வழக்கை தொடுத்தது? எங்கே தொடுத்தது? வழக்கு எண் என்ன? திமுகவின் சார்பில் என்ன வாதம் வைக்கப்பட்டது? என்பதையெல்லாம் திமுக தலைவர் நாட்டு மக்களுக்கு ஆதாரத்துடன் தெரியப்படுத்த வேண்டும் என்றார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், நகர சீரமைப்புகளை, மேம்பாடுகளை பற்றி பேசாமல் இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வதையே முதலும் முக்கியமுமாய் செய்வதாகவும், இரு கட்சிகளும் நடக்க இருப்பது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என்பதை மறந்து விட்டதா? எனவும் மக்கள் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.