இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போதைய காலத்தில் அது மிகவும் குறைந்துக் கொண்டே வருகிறது. இயற்கை விவசாயம் என்பது நம் பழந்தமிழர் செய்து வந்த விவசாயம் ஆகும். பல விவசாய நிலங்கள் பல அடுக்கு மாடிக் கட்டிடங்களாக மாறியுள்ளன. காரணம் விவசாயம் செய்வதற்கான காலநிலையும் முதலீடும் இல்லாதது தான். ஆனால் அந்தக்கால மக்கள் எப்படி விவசாயம் செய்து வந்தனர் தெரியுமா?
நம் தாத்தா காலத்திற்கும் தாத்தா காலம். அப்போது இயற்கையாக மக்கும் குப்பைகளைப் பயன்படுத்தியும் கால்நடைகளின் கழிவுகளைப் பயன்படுத்தியும் தான் செய்து வந்தனர். இயற்கையாக மரங்களின் கிளைகளை வெட்டி அதை உழுது பிறகு நடவு நடவாது தான் வழக்கம்.
இயற்கை விவசாயத்தில் எந்த விதமான செயற்கையான பூச்சிக் கொல்லி மருந்துகளும் பயன்படுத்த மாட்டார்கள். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் செயற்கை உரங்களை மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கினர். காரணம் அதி வேகத்தில் பயிர் வளர மற்றும் தோற்றம் மற்றும் சுவையை மாற்றத் தான். இவை வியப்பூட்டும் வகையில் இருந்தாலும் பயன்களைத் தந்தாலும் செயற்கையான பொருள்களைப் பயன்படுத்துவதால் கேடுகளே அதிகம் என்றுக் கூறலாம்.
நிலத்தை நன்றாக உழுது மண் வளத்திற்கு ஏற்றப் பயிர்களை அப்போது வைத்து வந்தனர். அது மட்டும் இல்லாமல் மண் வளர்த்திற்கேற்ற பயிர்களை மாற்றி மாற்றி பயிர்செய்து வந்தனர். ஆனால் இப்போது மண் வளமும் பார்ப்பதில்லை நீர்வளமும் பார்ப்பதில்லை. பிறருக்கு நன்றாக விளைச்சல் வந்துவிட்டது நமக்கும் அப்படி வரும் என நினைத்து பயிர் வைக்கின்றனர். தேவையற்ற பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். வேதியியல் ரீதியான ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி மக்களின் பாதி ஆயுட்காலம் குறைக்கப்பட்டு வருகிறது.
அப்போது நிலம்,நீர்,காற்று போன்ற இயற்கையை சார்ந்தே அனைத்துப் பயிர்களும் வைக்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது அது சிறிதும் இல்லை! மரங்களை அதிகம் வெட்டுவதால் மண்ணரிப்பு, வெப்பமயமாதல் போன்ற பலப் பிரச்சனைகள் உருவாகின்றன. இதனால் இயற்கை விவசாயம் என்பது செய்ய முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இயற்கை விவசாய முறைக்கு மாறினால் தான் விவசாயம் காப்பாற்றப்படும்.
அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்றுக் கேட்கின்றீர்களா? நிலம் இருந்தால் விவசாயம் செய்யுங்கள் இல்லை என்றால் இன்னுமும் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருபவர்களிடமிருந்து பொருட்களை வாங்குங்கள். விவசாயம் தான் அடுத்தவருக்கு உணவளிக்கும் உன்னதமான தொழில்.