கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற போட்டிக்குப் பிறகு மகேந்திர சிங் தோனி பேசியது அவரது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற நடப்பு ஐபிஎல் சீசனின் 33-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய சென்னை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்த சீசனில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி முதலாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த சீசனோடு சென்னை அணியின் கேப்டன் தோனி விடைபெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சென்னை அணியின் ஹோம் மைதானமான சென்னையை போலவே, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களிலும் சென்னைக்கு ஆதரவாக ரசிகர்கள் குவிந்து ஆரவாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றைய போட்டி முடிந்த பிறகு தோனி பேசுகையில்,“மைதானத்திற்கு அதிக எண்ணிக்கையில் திரண்டு வந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு தெரிந்து அடுத்தப் போட்டியில் இவர்கள் அனைவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஜெர்ஸியில் வருவார்கள் என நினைக்கிறேன். இவர்கள் எனக்கு பிரியாவிடை கொடுக்க வந்துள்ளனர். கொல்கத்தா ரசிகர்களுக்கு நன்றி” என தோனி தெரிவித்துள்ளார்.
தோனியின் இந்தப் பேச்சு அவரின் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தோனி குறித்து ட்விட் போட்ட ஹர்பஜன்; வைரலான பதிவு!