வாட்சப் செயலியின் தமிழாக்கம் புலனம் அல்லது பகிரி எனப்படுகிறது. இந்த பகிரி செயலியை உலகம் முழுவதும் பல்வேறு மக்கள் உபயோகித்து வருகின்றனர். கேளிக்கையில் ஆரம்பித்து முக்கியமான விடயங்கள் வரை பகிரவும், உரையாடவும் பகிரி செயலியானது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இச்செயலி இல்லையென்றால் அடிப்படை முதல் ஆடம்பரம் வரை அனைத்து வகையான அன்றாடங்களிலும் குறுக்கீடுகள் நேரும் என்ற அளவுக்கு பகிரி செயலியின் தேவை தற்காலத்தில் உள்ளது.
இப்படியான சூழலில் தொடர்ந்து தன்னை மக்கள் மத்தியில் தக்கவைத்துக் கொள்ளவும், புதிய பயனர்களைக் கவரவும், ஏற்கனவே இருக்கும் பயனர்களைத் திருப்தி செய்யவும் அவ்வபோது அப்டேட்டுகள் எனப்படும் புதுப்பித்தல் நிகழ்வுகளை பகிரி செயலியில் நிகழ்த்துவர்.
அவ்வாறாக செயலியில் புதுப்பித்தல் நிகழ்த்தியதின் மூலமாகத்தான் தற்போது இருக்கும் பல நவீனங்களை நம்மால் பகிரி செயலியில் உபயோகிக்க முடிகிறது.
இதையெல்லாம் இப்போது ஏன் கூறுகிறீர்கள் என்று கேள்வி உங்களுக்குள் எழும்புமாயின் அதற்கான பதில், பகிரி செயலியில் இரு புதிய அம்சங்கள் புகுத்தப்பட்டுள்ளன என்பதுதான்.
ஆம்! அவ்வபோது புதுப்பித்தல் நிகழ்வை நிகழ்த்தும் பகிரி செயலியில் குறைந்த இடைவெளியில் இரு புதிய அம்சங்கள் புகுத்தப்பட்டிருப்பது பயனர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
முதல் அம்சம்
பகிரி செயலியில் நிகழ்த்தப்பட்ட புதுப்பித்தலில் குறுஞ்செய்திகளுக்கு பதில்வினை (ரியாக்ஷன்) செய்யப்படும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முகநூல்(facebook), படச்சுருள் (instagram) போன்றவற்றில் இம்முறை ஏற்கனவே இருக்கிறது. ஆனால் பகிரி செயலியில் இவை இல்லை.
பல நாட்களாக பயனர்கள் வைத்த கோரிக்கையின்படி தற்சமயம் இந்த புதிய அம்சமானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, தற்போது பீட்டா பகிரி (beta whatsapp) செயலியில் இந்த அம்சமானது சோதனையில் இருந்து வருகிறது. சோதனையில் நல்ல வரவேற்பை இந்த அம்சம் பெற்று வருவதால் விரைவில் அனைவரும் உபயோகிக்கக் கூடிய வகையில் இந்த அம்சமானது அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இரண்டாம் அம்சம்
பகிரி செயலியில் இருக்கும் தற்போதைய அம்சத்தின்படி, பகிரியை நம்மால் ஓரே நேரத்தில் கைப்பேசியிலும், கணினி போன்றவற்றைகளிலும் உபயோகிக்க முடியும். செயலியில் இருக்கும் பகிரி இணைத்தல் (whatsapp web) மூலம் நம் கைப்பேசியில் பகிரியை உபயோகித்துக் கொண்டே, கணினி போன்றவைகளில் உபயோகிக்க முடியும்.
தற்போது, மேற்கூறியவாறு இணைக்கும் வசதியில்தான் புதிய மேம்பாட்டை நிகழ்த்தியிருக்கிறார்கள். இந்த மேம்பாட்டின்படி, ஒரே சமயத்தில் ஐந்து சாதனங்களில் நம்மின் பகிரி செயலியை இணைக்க முடியும்.
இந்த முறை பகிரி செயலியின் இணைப்பை நிகழ்த்த இணைப்பு சாதனங்கள் ( linked device) என்ற வசதியை பயன்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர். இந்த அம்சமும் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க; உலகின் மிகச் சிறிய செயற்கைக்கோள் எதுவென்று உங்களுக்கு தெரியுமா?