இன்று தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புகள் வெளிவந்ததில் இருந்து தமிழகத்தின் மாநகராட்சிகளும், நகராட்சிகளும், பேரூராட்சிகளும் தொடர்ந்து பரபரப்பாகவே இருந்து வந்தன.
கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு, கட்சிகளின் திட்டங்கள் வெளியீடு, வாக்கு சேகரிப்பு, கட்சிகளுக்கு இடையேயான போட்டிகள், விமர்சனங்கள், பணப்பொருட்கள் விநியோகித்தல் என பரபரப்பிற்கு காரணமான பட்டியல்களை நீட்டிக்கொண்டுச் செல்லலாம். இப்படியாக இருக்க கடந்த வியாழன் அன்று பரப்புரைகள் ஓய்ந்தன.
இன்று, தமிழகத்தில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையம் அந்தந்த மாநகராட்சிகளின் வாயிலாக, நகராட்சி, பேரூராட்சிகளின் வாயிலாக, இன்னும் சில நூதன முறைகளாக வாக்களர்களிடத்தில் வாக்கு செலுத்துதல் குறித்த விழிப்புணர்வை மேற்கொண்டனர்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் வாக்குப்பதிவுகளின் எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து மந்தமான அளவிலேயே வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று மதியம் ஒரு மணி வரை எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி 23.42 விழுக்காடு வாக்குப்பதிவுதான் சென்னை மாநகராட்சியில் நிகழ்ந்துள்ளது.
ஆகையால், சென்னை மாநகராட்சி, சென்னை மக்களை வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்குகளை செலுத்துமாறு கேட்டுக்கொண்டிருக்கிறது. மேலும், வாக்கினை செலுத்தாமல் குறை கூறாதீர்கள் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.