இந்தியாவில் கடந்த ஒரு நாளில், அதிகமான பேர் கொரோனா பெருந்தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.
கடந்த ஒரு வாரமாகவே கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில், கொரானாவிற்கு பலியானோரின் எண்ணிக்கை 1399 பேர் ஆவர். மேலும் 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 2483 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம், கடந்த 24 மணி நேரத்தில் 1070 பேர் கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை, இந்தியாவில் 187.95 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. 6 முதல் 12 வயதுடைய சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்திட இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் 12 வயதிற்கு மேற்பட்ட சிறார்களுக்கு ‘சைடஸ் கேடில்லா’ தடுப்பூசி செலுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ‘கோர்பேவாக்ஸ்’ என்ற தடுப்பூசியை 5 முதல் 12 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி வளாகத்தில் மீண்டும் 31 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக, தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்தில் ஐஐடியில் மூன்று பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து, ஐஐடி வளாகத்தில் இருக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
டெல்லியில், 100 பேரில் 6 அல்லது 7 பேருக்கு தான் தொற்று கண்டறியப்படுவதாகவும் தமிழகத்தை பொறுத்தவரையில், 1000 பேரில் 3 பேருக்கு தான் தொற்று உறுதியாகிறது என்றும், பாதிக்கப்பட்டவர்கள் குறைவான அறிகுறிகளுடனே இருப்பதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும், ராதாகிருஷ்ணன் அவர்கள் ஐஐடி மாணவர்களை சந்தித்து, நிலைமையைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் சென்னை ஐஐடி நிர்வாகம் மேற்கொள்ளும் எனவும் நம்பிக்கை அளித்தார்.
இந்தியாவில், மீண்டும் தீவிரமடையும் கொரோனாவினால் தடுப்பூசி செலுத்தப்படும் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க ; அதிகரிக்கும் கொரோனா – 20 கோடி தடுப்பூசிகள் வீணா? என்ன சொல்கிறது தடுப்பூசி நிறுவனம்!