விதிகளுக்கு புறம்பாக மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வது தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது.
விதிகளுக்கு புறம்பாக மருத்துவக் கழிவுகளை எல்லையோர மாவட்டங்களில் கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வது தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு கேரளாவில் இருந்து லாரிகளில் எடுத்துவரப்பட்டு மருத்துவக் கழிவுகள் தென்காசி, ஆனைமலை, பொள்ளாச்சி, நாமக்கல் ஆகிய பகுதிகளில் கொட்டப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் தமிழகம், கேரள மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களையும் நீலகிரி, திருப்பூர், தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களும் அதேபோல், கேரளாவின் மாவட்ட ஆட்சியர்களையும் ஒரு தரப்பாக அனைவரையும் சேர்ந்து பதில் மனுக்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், கடந்த 14 ஆம் தேதி தமிழகத்தின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் செந்தில்குமார், பசுமைத் தீர்ப்பாயத்தில் ஒரு விரிவான அறிக்கையினை தாக்கல் செய்துள்ளார்.
அதில் “தமிழகத்தில் சட்ட விரோதமாக மருத்துவக் கழிவுகளைத் தொடர்ச்சியாகக் கொட்டுவதால் ஏற்படும் அச்சுறுத்தல் மிகவும் ஆபத்தானது என்றும் கடுமையான சுகாதார அபாய சூழ்நிலையை ஏற்படுத்துகிறது என அரசின் தலைமை வழக்கறிஞர் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டம் 1982-ஐ பொதுமக்கள் நலன் கருதி அறிவியல் பூர்வமாக மேலாண்மை செய்யப்பட்டு மருத்துவக் கழிவுகளை எல்லையோர மாவட்டங்களில் சட்ட விரோதமாகக் கொட்டுபவர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி விரிவுபடுத்தலாம் என்ற கருத்தைத் தெரிவித்துள்ளார். தலைமை வழக்கறிஞரின் இக்கருத்து தொடர்பாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொளத்தூர் தொகுதி சீட் பெற்றுத்தர ஒரு கோடி ரூபாய்; கே.பி.முனுசாமி மீது புகார்!