கோவை கருத்தம்பட்டி நகராட்சித் தலைவர் பதவி தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், கூட்டணி தர்மத்துக்கு எதிராக பதவியேற்ற திமுகவின் மனோகரனைப் பதவி விலகக்கோரி கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மனோகரன் கூட்டணிக்கட்சியின் தலைவருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சிலதினங்களுக்கு முன்பு கூட்டணி தர்மத்துக்கு எதிராக நெல்லிக்குப்பம் நகர்மன்றத்தலைவர் பதவியைத் திமுகவினர் கைப்பற்றிய நிலையில், விடுதலைச் சிறுத்தைக் கட்சியின் தலைவர் திருமாவளவன் மேல்முறையிட்டதால் நெல்லிக்குப்பம் நகர்மன்றத்தலைவர் பதவி அக்கட்சியினருக்கே திருப்பி வழங்கப்பட்டது.
இந்நிலையில், கோவை கருத்தம்பட்டி நகர்மன்றத்தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. காங்கிரசின் சார்பில் பாலசுப்ரமணியம் எனபவரும், திமுகவின் சார்பில் மனோகரன் என்பவரும் போட்டியிட்டனர். ஆனால், 22 வாக்குகள் பெற்று திமுகவின் மனோகரன் வெற்றி பெற்றார், துணைத்தலைவராக யுவராஜ் என்பவர் வெற்றி பெற்றார்.
இதனால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் கட்சியினர் திமுகவினரைப் பதவி விலகுமாறு கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்த மனோகரன், கருத்தம்பட்டி மாநகராட்சித் தலைவர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் கூட்டணி தர்மத்தை அவமதிக்கும் வகையில் திமுகவினர் கடைசி ஐந்து நிமிடத்தில் வேட்பாளரைத் தேர்வு செய்து போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனர் என திமுகவினரின் மீது குற்றம் சாட்டினார்.
கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் பதவி விலக வேண்டும் என்று ஏற்கனவே திமுக தலைவர் அறிவித்துள்ள நிலையில், அதனை நிறைவேற்றும் விதமாக அவர்கள் பதவி விலக வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், யுவராஜ் என்பவர் காங்கிரசின் சார்பாக நின்று வெற்றி பெற்றுள்ளது தெரியவந்திருப்பதாகவும் அவர் காங்கிரஸ் கட்சியில் அடிப்படை உறுப்பினர் பதவியில் கூட இல்லை என்று தெரிவித்துள்ளார்.எனவே, கூட்டணிக்கட்சியின் தலைவர் உடனே தலையிட்டு அவர்களைப் பதவி விலகக் கோற வேண்டுமென்றும் பதவிகளைக் காங்கிரசுக்கே விட்டுத்தர வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.