மத்திய பிரதேசத்தில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலம் சூறையாடப்பட்டு சுவற்றில் ‘ராம்’ என எழுதி வைக்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், நர்மதபுரம் மாவட்டம், சிக்குபுரா கிராமத்தில் கிறிஸ்துவ மத வழிபாட்டுத்தலமான தேவாலயம் அமைந்துள்ளது. இங்கு பழங்குடியினர் பெரும்பாலான அளவில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக இப்பகுதியில் கிறிஸ்தவ தேவாலயத்தில் பிரார்த்தனைகள் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், இந்த கிறிஸ்தவ தேவாலயம் நேற்று மர்ம நபர்களால் சூறையாடப்பட்டது. மேலும் ஆலயத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் சூறையாடப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, கிறிஸ்தவ தேவாலயத்தை சூறையாடிய அந்தக் கும்பல் அங்குள்ள சுவற்றில் ‘ராம்’ என எழுதி வைத்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, இந்தத் தகவல் காவல்நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அங்கிருந்து தப்பியோடிய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். கிறிஸ்தவ மத வழிபாட்டு தலம் சூறையாடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பத்திரிகையாளரை மணந்தார் ‘சர்தார்’ பட இயக்குநர்!