சென்னை மாணவி சத்தியாவை கொன்ற வழக்கில், கொலையாளி சதீஷ் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கிண்டிக்கு அருகில் உள்ள பகுதிதான் ஆதம்பாக்கம். இப்பகுதியைச் சேர்ந்த சதீஷிற்கு வயது 23. இவர் அதே பகுதியை சேர்ந்த 20 வயதான சத்தியா என்ற மாணவியை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் வழக்கம்போல் ஆதம்பாக்கம் அருகிலுள்ள பரங்கிமலை ரயில் நிலையத்தில் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது இருவருக்குமிடையில் ஏதோ தகராறு ஏற்பட்டு அதனால், இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதாக தெரிகிறது.
இதையடுத்து, அப்போது அந்த வழியாக வந்த ரயில் முன் மாணவி சத்தியாவை, சதீஷ் தள்ளவிட்டார். ரயிலில் சிக்கிய சத்தியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தீவிர தேடுதலுக்குப் பின் தலைமறைவான சதிஷ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இதன்பிறகு, மாணவி கொலை வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சிறையில் உள்ள சதீஷை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி.யினர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவானது இன்று விசராணைக்கு வந்தது. அப்போது, காணொளி மூலமாக சதீஷ் ஆஜர்படுத்தப்பட்டார். காவல்துறையின் மனுவை விசாரித்த நீதிமன்றம், சதீஷை ஒருநாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது.
இதைத்தொடர்ந்து, சதீஷை சிறையில் இருந்து சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், கைதான சதீஷ் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது சிபிசிஐடி-யினரின் பரிந்துரையின் பேரில் நடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..! வானிலை ஆய்வு மையம்