தமிழகத்தை பொறுத்தமட்டில் கடந்த இரு மாதமாகவே பெரும்பாலும் வறண்ட வானிலைதான் நிகழ்கிறது. இலேசான மழையாவது வருமா என எதிர்பார்த்த மக்கள் தொடர்ந்து ஏமாற்றத்திற்குத்தான் உள்ளாகினர். வானிலை மையம் அவ்வபோது இலேசான மழைக்கு வாய்ப்பு என்று அறிவித்தாலும் அதுவும் பொய்த்து விடுகிறது.
இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகவுள்ளதாக சென்னை மண்டல வானிலை மையம் அறிவித்துள்ளது.
அதன்படி நாளை மறுநாள் தென் தமிழிக மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற பகுதிகளிலும் கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய இலேசான மழையும், கன மழையும் பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நாளை மறுநாள் மட்டும் அன்றி, மூன்றாம் தேதியும் இலேசான மழை முதல் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், காலை நேரஙகளில் பனி மூட்டம் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை ஒட்டி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.