நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் இரவு 7:30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஐராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்டன.
சென்னை அணி கடந்தப்போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்ததால், சென்னை அணியின் மீது, மீண்டும் நம்பிக்கைத் திரும்பியது. ரசிகர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை மேன்மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணி களமிறங்கியது.
தனது முதல் இடத்தை யாருக்கும் விட்டுத்தரக்கூடாதென்ற முனைப்பிலும், தொடர் வெற்றிகளை ருசிக்க வேண்டுமென்ற முனைப்பிலும் நேற்றையப்போட்டியில் குஐராத் டைட்டன்ஸ் களமிறங்கியது. ஹர்திக் பாண்டியா இல்லாமல் நேற்றைய ஆட்டத்தில் களம்கண்டது, குஐராத் டைட்டன்ஸ்.
டாஸ் வென்ற, குஐராத் டைட்டன்ஸ் அணியானது முதலில் பந்துவீச்சில் ஈடுபட்டது. ஆகவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கில் இறங்கியது.
சென்னை அணி
சமீபத்திய போட்டிகளில் சொதப்பி வந்ததாக கருதப்பட்ட ருத்ராஜ் கெய்க்வாட் 48 பந்துகளுக்கு 73 ரன்கள் எடுத்து அசத்தினார். அதே சமயம் நன்றாக விளையாடிய உத்தப்பா நேற்றையப் போட்டியில் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். மொயின் அலியும் 1 ரன்னுக்கு தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
ருத்ராஜ் கெய்க்வாட்டுக்கு உறுதுணையாக களத்தில் இருந்த ராயுடு 46 ரன்கள் அடித்து, அணியின் ஸ்கோர் உயர்விற்கு வித்திட்டார். மேலும், சிவம் துபே மற்றும் ரவீந்திர ஜடாஜா முறையே 19, 22 ரன்களை அடித்தனர். இருபது ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்திருந்தது.
குஜராத் அணி
166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது, குஐராத் டைட்டன்ஸ். சென்னை அணியின் பந்துவீச்சு ரசிகர்களுக்கு நம்பிக்கைத் தரும் வகையிலேயே அமைந்தது. ஆம்! சென்னை வீரர்கள் அடுத்தடுத்த ஓவர்களில் சுப்மன் கில் மற்றும் விஜய் சங்கரை டக் அவுட் செய்து பெவிலியனை நோக்கி திருப்பி அனுப்பினர்.
மேலும், சஹா 12 ரன்களிலும், அபினவ் மனோகர் 11 ரன்களிலும் தனது விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணியானது வெற்றி நம்பிக்கையை இழந்தது. எதிர்ப்பார்க்கப்பட்ட ராகுல் திவாட்டியாவும் சொற்ப ரன்களில் வெளியேறினார்.
ஆனால், டேவிட் மில்லர் மிகவும் அதிரடியாக விளையாட ஆரம்பித்துவிட்டார். சென்னை அணியின் பந்துவீச்சை சிதறடித்தார் என்றே சொல்ல வேண்டும். மில்லர் சென்னை அணிக்கு எதிராக ருத்ரதண்டவம் ஆடிக்கொண்டிருந்த நிலையில், அதற்கு பக்கபலமாக இருந்தார் குஐராத் அணியின் கேப்டன் ரஷித்கான். இதன்பின்பு, 21 பந்துகளுக்கு 40 ரன்கள் எடுத்த நிலையில் ரஷித்கான் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இறுதி ஓவர்
இறுதி ஓவரில் பத்து ரன்கள் தேவைப்பட, முதல் பந்தில் ஜோசப் விக்கெட்டை வீழ்த்தினார், ஜோர்டன். ஆதலால் நம்பிக்கை சற்றே சென்னை பக்கம் திரும்ப, அந்நம்பிக்கையை பொய்யாக்கினார், ஜோர்டான்.
ஓவரின் மூன்றாவது பந்தில் மில்லர் சிக்சர் விளாசினார். மேலும், ஜோர்டன் நோ பால் ஒன்றைப்போட அதிலும் மில்லர் பவுண்டரி அடிக்க குஜராத் டைட்டன்ஸ் அணி 19.5 ஆவது பந்தில் வெற்றியை ருசித்தது.
ஜோர்டன், அந்த நோ பாலை வீசவில்லை என்றால் போட்டி சென்னைப் பக்கம் திரும்பியிருக்க வாய்ப்பிருப்பதாக சென்னை ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
இப்போட்டியின் ஆட்டநாயகன் விருது டேவிட் மில்லருக்கு வழங்கப்பட்டது.