சென்னையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின்போது திமுகவினர் மீது தாக்குதல் நடத்தியதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த சனிக்கிழமை நடந்தது. இதில், பல்வேறு இடங்களில் திமுகவினர் சிலர் அத்துமீறி வாக்குச்சாவடிகளுக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்டதாக அதிமுக தரப்பில் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது.
இதனிடையே, ராயபுரம் தொகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக ஒருவரை அதிமுகவினர் பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் தாக்கத் தொடங்கினர். அப்போது, பிடிபட்ட நபரை அடிக்க வேண்டாம் என்றும், அவரது கையை கட்டும்படியும் கூறிய ஜெயக்குமார், அந்த நபரை சட்டையின்றி சாலையில் அழைத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர், ஜெயக்குமார் மற்றும் அதிமுக தொண்டர்களால் தாக்குதலுக்கு உள்ளான நபர் திமுக தொண்டர் என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவ தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகின.
இந்த நிலையில், சென்னை ராயபுரம் தொகுதியில் திமுக தொண்டர் ஒருவரைத் தாக்கியது தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்வத்தினை அடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார் “முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தி.மு.க நிர்வாகியின் சட்டையைக் கழற்றி அவமானப்படுத்தியிருக்கிறார். கழகம் இதனைச் சட்டரீதியாக நிச்சயம் எதிர்கொள்ளும். அப்போது அவர்களின் சட்டை மட்டுமல்ல, மொத்தமும் கழன்று போகிற வகையில் அம்பலப்படுவார்கள்” என்று கூறியுள்ளார்.